

பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டவையே . யதேச்சையாக மரத்திலிருந்து ஆப்பிள் பழம் விழுந்ததை கண்டு புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தார் ஐசக் நியூட்டன். அதுபோலவே யதேச்சையாக நடந்த நிகழ்வுகளை ஊன்றிக் கவனித்து பல கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
அப்படி ஆய்வகத்தில் சேர்ந்த குப்பையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் உலகின் முதல் ஆன்டிபயாட்டிக் மருந்து. ஆண்டிபயாடிக் (Antibiotic) அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பி என்பது பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுகளைத் தடுக்கவும், குணப்படுத்தவும் பயன்படும் ஒரு சக்திவாய்ந்த மருந்து ஆகும்.
1928ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்து நாட்டவரான அலெக்சாண்டர் ஃப்ளெமிங் என்னும் அறிவியலாளர்,' ஸ்டெபைலோகாக்கஸ்' என்னும் பாக்டீரியா ஒன்றை வைத்து ஆய்வுகள் செய்துகொண்டிருந்தார். ஒருநாள், மறதியாக பாக்டீரியா வளர்க்கும் தட்டு ஒன்றை அவர் திறந்தே வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
ஃப்ளெமிங் மறுநாள் ஆய்வகத்திற்கு சென்றபோது அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அந்த பாக்டீரியா வளர்க்கும் தட்டில், காற்றில் பறந்து வந்த பெனிசிலியம் என்னும் பூஞ்சை வளர்ந்திருந்ததை அவர் கண்டார். அப்போது, தற்செயலாக அவரது கண்களில் ஒரு விசயம் தென்பட்டது. ஆம், அந்த பூஞ்சை வளர்ந்திருந்த இடங்களைச் சுற்றியிருந்த பாக்டீரியா காணாமல் போய்விட்டிருந்தது.
அவர் அறிவியலாளர் அல்லவா! ஆழ்ந்து யோசிக்கத் துவங்கினார். விளைவு, அந்த பெனிசிலியம் என்னும் பூஞ்சை, பாக்டீரியாக்களைக் கொல்லக்கூடிய ஒரு திரவத்தை வெளியிடுகிறது என்பதை அவர் கண்டுபிடித்தார்.' பென்சிலினா நோட்டேட்டம்' எனும் அந்த பூஞ்சையிலிருந்து மருந்து ஒன்றை தயாரித்தார் அலேக்சாண்டர் பிளமிங் அதுதான் 'பென்சிலின்'. அப்படித்தான் உலகில் முதல் ஆன்டிபயாட்டிக் கண்டுபிடிக்கப்பட்டது.
பெனிசிலியம் என்னும் பூஞ்சையிலிருந்து அந்த ஆன்டிபயாட்டிக் கண்டுபிடிக்கப்பட்டதால், அதற்கு 'பெனிசிலின்' என்னும் பெயரிட்டார் ஃப்ளெமிங். முதல் உலகப்போரில் காயம்பட்ட ஏராளமான வீரர்கள் கிருமித்தொற்றால் உயிரிழந்திருந்த நிலையில், இரண்டாம் உலகப்போரின்போது பெனிசிலின் ஆன்டிபயாட்டிக் இருந்ததால் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
பென்சிலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நவீன ஆய்வுக் கூடத்திற்கு சென்றார் பிளம்பிங். ஆய்வுக் கருவிகள் தூய்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தன. அப்போது ஒருவர்," நீங்கள் இதுபோன்ற ஒரு தரமான ஆய்வகத்தில் பணியாற்றி இருந்தால் இன்னும் என்னவெல்லாம் கண்டு பிடித்திருப்பீர்கள் என்று யாரால் சொல்ல முடியும்" என்றார். இதைக் கேட்ட பிளமிங் "நிச்சயமாக பென்சிலினை கண்டுபிடித்திருக்க மாட்டேன்" என்றார்.
காலப்போக்கில் பல்வேறு ஆன்டிபயாட்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. விசயம் என்னவென்றால், ஆன்டிபயாட்டிக்குகள் எண்ணிக்கை பெருகப் பெருக, கிருமிகள் அதை எதிர்க்கும் தன்மையை வளர்த்துக்கொண்டன. அதாவது, ஆன்டிபயாட்டிக் சிகிச்சை அளித்தாலும் கொல்லப்படாத கிருமிகள் உருவாகின. அவை மருந்து எதிர்ப்பு பாக்டீரியா (drug-resistant bacteria) என அழைக்கப்படுகின்றன.
மருந்து எதிர்ப்பு பாக்டீரியா (Antibiotic Resistance) என்பது, ஒரு பாக்டீரியா தொற்றுக்கு எதிராக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பி (Antibiotics) மருந்துகள் அந்த பாக்டீரியாவைக் கொல்லாமலோ அல்லது அதன் வளர்ச்சியைத் தடுக்காமலோ போவதைக் குறிக்கிறது. இது உலகளவில் தீவிரமாகி வரும் ஒரு மருத்துவப் பிரச்னையாகும்.
2050 வாக்கில், புற்றுநோயால் உயிரிழப்போரைவிட, இந்த drug-resistant bacteria வால் கொல்லப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என ஏற்கனவே ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள். இந்நிலையில், கனடா ஆய்வாளர் ஒருவர், இந்திய வம்சாவளி ஆய்வாளர் ஒருவர், மற்றும் சில நாட்டு ஆய்வாளர்கள் இணைந்து புதிய ஆன்டிபயாட்டிக் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள்.
டாக்டர் ஜெர்ரி ரைட் (Dr. Gerry Wright) கனடாவில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் (McMaster University) உயிர்வேதியியல் மற்றும் உயிரியல் மருத்துவ அறிவியல் பேராசிரியராக உள்ளார். நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிரான (Antimicrobial resistance) ஆய்வுகளில் உலக அளவில் புகழ்பெற்ற இவர், அவரது சக ஆய்வாளரான மன்பிரீத் கௌர் என்னும் இந்திய வம்சாவளி ஆய்வாளர் ஆகியோர் இணைந்து manikomycin என்னும் புதிய ஆன்டிபயாட்டிக் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். அவர்களுடன் இந்த ஆய்வில் ஜெர்மனி மற்றும் அமெரிக்க ஆய்வாளர்களும் இணைந்து பணியாற்றியுள்ளார்கள்.
ஸ்ட்ரெப்டோமைசஸ் ரிமோசஸ் (Streptomyces rimosus) என்னும் பாக்டீரியத்தின் உடலிலுள்ள ஒரு உட்பொருளை பயன்படுத்தி இந்த ஆன்டிபயாட்டிக் தயாரிக்கப் பட்டுள்ளது. முக்கியமான விசயம், இந்த மனிகோமைசின்' (manikomycin) ஆன்டிபயாட்டிக், drug-resistant bacteriaவையும் கொல்லக்கூடியது என்பதுதான்.
இந்த ஆன்டிபயாட்டிக் தொடர்பில் மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது என்பதால், அது பயன்பாட்டுக்கு வர சிறிது காலம் பிடிக்கக்கூடும் என்றாலும், அது பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், drug-resistant bacteriaவால் கொல்லப்படும் நோயாளிகள் எண்ணிக்கை நிச்சயம் வெகுவாக குறையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்கிறார்கள்.
மருத்துவ உலகையே அச்சுறுத்தி வரும் சூப்பர்பக்ஸ் (Superbugs) எனப்படும் மருந்து எதிர்ப்பு பாக்டீரியாக்களின் ஆபத்திலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்ற அதிமுக்கியமான விழிப்புணர்வையும், எதிர்கால மருத்துவத் தொழில்நுட்பம் நமக்கு அளிக்கும் அசாத்திய நம்பிக்கையையும் இக்கட்டுரையின் மூலம் நீங்கள் முழுமையாகப் பெற்றுக் கொள்வீர்கள்.