

மனித நாகரிகத்தின் தொடக்க காலத்தில், உடைமைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு சவாலான விஷயமாக இருந்தது. அந்தத் தேடலின் விளைவாக உருவானதுதான் ‘பூட்டு’ மற்றும் ‘சாவி’. இன்று நாம் டிஜிட்டல் மற்றும் பயோமெட்ரிக் பூட்டுகளைப் பயன் படுத்தினாலும், இதன் வேர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையவை.
ஆரம்பகால கண்டுபிடிப்பு: பூட்டைத் திறக்க முதன்முதலில் சாவியைப் பயன்படுத்திய பெருமை பண்டைய எகிப்தியர்களையே சாரும். சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் மரத்தாலான பூட்டு முறையை (Pin tumbler lock) உருவாக்கினர். இந்த பூட்டுகள் முழுவதும் மரத்தால் செய்யப்பட்டவை. கதவின் உள்புறம் ஒரு மரத் தாழ்ப்பாள் இருக்கும். அதில் உள்ள துளைகளுக்குள் சில மர ஆணிகள் பொருத்தப் பட்டிருக்கும்.
அந்த காலத்துச் சாவிகள் இன்று இருப்பது போல சிறியவை அல்ல. அவை ஒரு பெரிய மரக் கட்டையாலான தூரிகை (Brush) போல இருக்கும். அந்தச் சாவியை உள்ளே நுழைத்து மேலே தூக்கும்போது, உள்ளே இருக்கும் ஆணிகள் விலகி தாழ்ப்பாள் திறக்கும்.
மெசபடோமியா மற்றும் பிற பகுதிகள்
எகிப்தியர்களுக்கு இணையாக மெசபடோமியா (இன்றைய ஈராக்) பகுதியிலும் இத்தகைய மரப்பூட்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவை மிகவும் பாதுகாப்பானவை என்றாலும், மரத்தால் ஆனவை என்பதால் எளிதில் உடைக்கப்படக்கூடியதாக இருந்தன.
உலோகப் பூட்டுகளின் வருகை: எகிப்தியர்களின் அடிப்படைத் தத்துவத்தை எடுத்துக்கொண்டு, அதை மேம்படுத்தியவர்கள் ரோமானியர்கள். அவர்கள் மரத்திற்குப் பதிலாக இரும்பு மற்றும் வெண்கலத்தைப் பயன்படுத்திப் பூட்டுகளைச் செய்தனர். அதனால் சாவிகளின் அளவு கணிசமாகக் குறைந்தது.
அணிந்துகொள்ளும் சாவிகள்: ரோமானியர்கள் சாவிகளைத் தங்கள் சமூக அந்தஸ்தின் அடையாளமாகக் கருதி மோதிரமாகச் செய்து விரல்களில் அணிந்துகொண்டனர். இது அவர்கள் பெரிய சொத்துக்காரர்கள் என்பதைக் காட்டப்பயன்பட்டது. பூட்டின் உள்ளே சாவியைத் திருப்புவதற்குத் தடையாக இருக்கும் ‘வார்டுகள்’ என்ற முறையை இவர்களே அறிமுகப்படுத்தினர்.
நவீன பூட்டுகளின் பரிணாமம்
பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் நாம் இன்று பார்க்கும் நவீன பூட்டுகள் உருவாகத் தொடங்கின. 1778-இல் ராபர்ட் பேரன் என்பவர் ‘டபுள் ஆக்டிங் லீவர்’ பூட்டைக் கண்டுபிடித்தார். அதைத் தொடர்ந்து 1848-இல் லினஸ் யேல் (Linus Yale) என்பவர் எகிப்தியர்களின் பழைய முறையை நவீனப்படுத்தி ‘யேல் பூட்டு’ (Yale lock) என்று அழைக்கப்படும் சிலிண்டர் பூட்டுகளை உருவாக்கினார். இதுவே இன்றும் உலக அளவில் பிரபலமாக உள்ளது.
பூட்டுகளின் வகைகள்
1.இயந்திரப் பூட்டுகள்: இவை பாரம்பரியமான, இயங்கும் பூட்டுகள்.
லீவர் பூட்டுகள்: இவை பொதுவாக பீரோக்கள் மற்றும் வீட்டின் பிரதான கதவுகளில் பயன்படுத்தப்படுபவை.
பின் டம்பளர் பூட்டுகள்: இவை சிலிண்டர் வடிவில் இருக்கும். சிறிய ரகச் சாவிகளைப் பயன்படுத்தும் கதவுகளில் இவை அதிகம் காணப்படுகின்றன.
பேட்லாக்ஸ்: நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் தொங்கு பூட்டுகள்.
2.மின்னணு மற்றும் டிஜிட்டல் பூட்டுகள்: சாவிகளுக்குப் பதிலாக மின்சாரம் அல்லது பேட்டரி மூலம் இயங்குபவை.
கீபேட் பூட்டுகள்: இதில் ஒரு ரகசிய எண் குறியீட்டை (PIN) உள்ளீடு செய்வதன் மூலம் பூட்டைத் திறக்கலாம்.
3.பயோமெட்ரிக் பூட்டுகள்: மனித உடலின் தனித்துவமான அடையாளங்களைக் கொண்டு இவை இயங்குகின்றன. மிக உயர்ந்த பாதுகாப்பிற்கு இவை சிறந்தவை.
விரல் ரேகை பூட்டுகள்: பதிவு செய்யப்பட்ட விரல் ரேகையை வைத்தால் மட்டுமே பூட்டு திறக்கும்.
முக அங்கீகாரப் பூட்டுகள்: கேமரா மூலம் முகத்தை ஸ்கேன் செய்து அடையாளத்தை உறுதிப்படுத்துபவை.
விழித்திரை ஸ்கேனர்கள்: கண்கள் மூலம் அடையாளத்தைக் கண்டறியும் முறை.
4.ஸ்மார்ட் பூட்டுகள்: இவை இணையம் அல்லது புளூடூத் மூலம் இயங்குபவை. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் ஸ்மார்ட்போன் வழியாக வீட்டின் கதவைப் பூட்டவோ அல்லது திறக்கவோ முடியும்.
ஆரம்பத்தில் ஒரு பெரிய மரக்கட்டையாகத் தொடங்கிய சாவியின் பயணம், இன்று ஒரு விரல் ரேகையிலோ அல்லது ஸ்மார்ட்போன் மூலமோ பூட்டைத் திறக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்த ஒட்டுமொத்த தொழில்நுட்பத்திற்கும் அடித்தளம் இட்டவர்கள் பண்டைய எகிப்திய கலைஞர்களே என்பதில் ஐயமில்லை.