புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி.

புற்றுநோய் செல்கள் எப்படி உருவாகிறது? அதற்கான மருந்துகள் எப்படி செயல்படுகிறது என்பதைக் கண்டறிய, ஒரு எளிமையான ஸ்கேனிங் முறையை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் செயல்களைக் கண்டறிய முடியும் என சொல்லப்படுகிறது. 

புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில்  பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் பிரிட்டன் மருத்துவர்கள் கண்டறிந்த கேன்சரை ஸ்கேன் செய்து கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சி வியக்கத்தக்க வகையில் இருக்கிறது. 

2018 இல், எலிகளின் உடலை டிரான்ஸ்பரண்டாக மாற்றி ஆராய்ச்சி செய்வதற்கு, ஹெம்ஹோல்ட்ஸ் முனிச் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் அலி என்பவர் உள்ளடங்கிய குழுவினர் முயற்சி செய்தனர். அந்த ஆய்வில் சில அமிலங்களைப் பயன்படுத்தி எலியின் உடலை டிரான்ஸ்பரண்டாக மாற்றி, உள்உறுப்புகளை எளிமையாக ஆய்வு செய்ய முற்பட்டனர். அதாவது இறந்த எலியின் உடலினுள் உள்ள கொழுப்புகளையும், நிறமிகளையும் சில அமிலங்களைப் பயன்படுத்தி நீக்கி, அதில் சில புற்றுநோய் செல்களைப் பொருத்தி ஆய்வு செய்தனர். 

இந்த புதிய வகை ஸ்கேனிங் முறை மருத்துவத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போகிறது எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். புற்றுநோய் செல்கள் செலுத்தப்பட்ட எலியை ஸ்கேன் செய்த போது அதன் ஆரம்ப கட்ட நிலையை அந்தக் குழுவால் கண்டறிய முடிந்தது தெரியவந்தது. MRI ஸ்கேனிலேயே புற்றுநோய் செல்களை துல்லியமாகக் கண்டறிய முடியாத நிலையில், இப்படிப்பட்ட ட்ரான்ஸ்பரென்ட் ஸ்கேனிங் முறையில் ஆரம்பகால சிறு கேன்சர் செல்களையும் கண்டறிய முடிந்ததாக ஆய்வாளர்கள் கூறினர். 

எலிகள் மீது நடத்தப்பட்ட இந்த ஸ்கேனிங் முறை, ஒருவரது உடலில் எந்த அளவுக்கு புற்றுநோய் செல்கள் வளர்ந்துள்ளது, ஒருவரின் புற்று நோய்க்கு அளித்த மருந்துகள் எப்படி வினைபுரிகிறது போன்ற விவரங்களை துல்லியமாகக் கண்டறிய இந்த முறை பயன்படும் எனக் கூறப்படுகிறது. பொதுவாகவே புதிதாக கண்டுபிடிக்கும் எந்த மருந்தாக இருந்தாலும் அது எலிகளின் மீது சோதிக்கப்பட்டு, மனிதர்களுக்கு ஒத்து வருமா இல்லையா என்பது அங்கீகரிக்கப்படும். 

இந்நிலையில் எலிகள் மீதான இந்த புதிய சோதனை நம்பிக்கை அளிக்கும் விதமாக இருப்பதாக மருத்துவர்கள் நம்புகின்றனர். இந்த சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தால், மருத்துவ வரலாற்றில் மிகப்பெரும் புரட்சி இதனால் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com