காணாமல் போன போனை கண்டுபிடிக்க புதிய இணையதளம்: சைபர் கிரைம் துறை அறிவிப்பு!

cyber crime
cyber crime
Updated on

தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவுத்துறை காணாமல் போன அல்லது திருட்டுப் போன கைப்பேசிகளை கண்டுப் பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்துடன் இணைந்து தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவுத்துறை புதிய இணையதளத்தை உருவாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு, ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்துடன் இணைந்து தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவுத்துறை மே மாதம் 17ஆம் தேதி சஞ்சார் சாத்து என்ற புதிய இணையதளத்தை தொடங்கியது. இதன் மூலம் கைப்பேசி காணாமல் போன மற்றும் திருட்டுப் போன புகார்களை உடனடியாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் Central equipment identity register (ceir), TAFCOP, know your mobile (KYM) போன்ற பல்வேறு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் சிஇஐஆர் என்ற இணையதளத்தின் பக்கத்தில் காணாமல் போன அல்லது தொலைந்து போன கைப்பேசியின் உடைய ஐஎம்இஐ நம்பர் மற்றும் விவரங்களை பதிவுசெய்து, பயன்பாட்டில் உள்ள தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு அதற்கு வரும் ஓடிபி எண்ணை உறுதிசெய்தால் 24 மணி நேரத்தில் ஐஎம்இஐ கண்காணிக்கப்பட்டு கைபேசி முடக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட கைபேசியில் வேற ஏதேனும் சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டறைக்கு நோட்டிபிகேஷன் செல்லும். இதை எடுத்து சம்பந்தப்பட்ட கைபேசியை உடனடியாக கண்டுபிடிக்க முடியும். மேலும் இதன் மூலம் புகார் தாரரும் உடனுக்குடன் தகவல்களை அறிய முடியும்.

14422 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் ஐஎம்இஐ நம்பர் குறித்த உண்மை தன்மையை அறிய முடியும். மேலும் TAFCOP என்ற இணையதளத்தின் பக்கத்திற்கு சென்று கைபேசி எண்ணை குறிப்பிட்டால் அந்தப் பெயரில் எத்தனை நம்பர்கள் பயன்பாட்டில் இருக்கிறது என்றும் அறிந்து கொள்ள முடியும். இதனால் கைப்பேசி தொடர்பான புகார்களை உடனடியாக விசாரித்து உரியவர்களிடம் சேர்க்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com