Paytm பணப் பரிவர்த்தனை செயலி பயன்படுத்து பவர்களுக்கு அந்நிறுவனம் எச்சரிக்கை ஒன்றே விடுத்துள்ளது. இந்த செயலி வழியாக நீங்கள் அனுப்பும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், எதையெல்லாம் செய்ய வேண்டும் என சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளது Paytm நிறுவனம்.
இணையம் வழியாக பண மோசடி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எஸ்எம்எஸ், மின்னஞ்சல், OTP, QR ஸ்கேன் என பல வழிகளில் மக்களைக் குறிவைத்து ஸ்கேமர்கள் மோசடி செய்கிறார்கள். இத்தகைய மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக பின்பற்றும் சில பொதுவான வழிமுறைகளைப் பட்டியலிட்டு, மக்களை கவனமாக இருக்கும்படி பேடிஎம் நிறுவனம் எச்சரித்துள்ளது.
பண மோசடி செய்பவர்களின் முதல் தந்திரம், நாங்கள் பேடிஎம் நிறுவனத்திலிருந்து அழைக்கிறோம் என்பது போல நடித்து ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள் அனைத்தையும் கேட்பது. எந்த நிறுவனமாக இருந்தாலும் ஒருவரை போனில் அழைத்து தனிப்பட்ட தகவல்களைக் கேட்கமாட்டார்கள். எனவே இப்படி யாரேனும் உங்களை அழைத்தால் ஒருபோதும் எந்த விவரத்தையும் பகிர வேண்டாம்
அடுத்ததாக பணப் பரிவர்த்தனை தளத்தில் KYC பிராசஸ் முடிக்க உதவுவதாகக் கூறி, தெரியாத எண்ணிலிருந்து மோசடிக்காரர்கள் அழைப்பார்கள். இதையும் யாரும் நம்ப வேண்டாம்.
நீங்கள் பணப்பரிமாற்றம் செய்யும் செயலியை வைத்திருக்கும் சாதனத்தில் ஸ்கிரீன் ஷேரிங் செயலியை நிறுவ வேண்டாம். அத்தகைய ஸ்கிரீன் ஷேரிங் செயலி வழியாகவும் கொள்ளையர்கள் உங்கள் பணத்தைத் திருட வாய்ப்புள்ளது. மேலும் ஒருவரிடம் இருந்து பணத்தைப் பெறுவதற்கு உங்களுடைய UPI Pin-ஐ நீங்கள் உள்ளிடத் தேவையில்லை. அப்படி யாராவது உங்களிடம் கேட்டால் ஒருபோதும் அளிக்காதீர்கள்.
உங்கள் பணப்பரிவர்தனை ஆப்களின் பாஸ்வேர்டை தெரிந்த நபராக இருந்தாலும் பகிர வேண்டாம். சிலர் மெசேஜ் வாயிலாக உங்களுக்கு சலுகை கிடைத்துள்ளது என்று சொல்வார்கள். அவர்களுக்கு ஒருபோதும் பதில் அளிக்க வேண்டாம். இறுதியாக உங்களுக்குத் தெரியாத எண்களிலிருந்து வரும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என Paytm தன் பயனர்களை எச்சரித்துள்ளது.
மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் முறையாகப் பின்பற்றினால் இணையத்தில் பணத்தை இழக்கும் நிகழ்வுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் ஏதேனும் ஒரு வழியில் பணத்தை இழந்திருந்தால் எவ்வித தயக்கமும் காட்டாமல் உடனடியாக காவல் நிலையத்திலோ அல்லது குறிப்பிட்ட நிறுவனத்திடமோ புகார் அளிக்கவும்.