உப்பை மூலப் பொருளாக கொண்ட சோடியம் அயன் பேட்டரிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று வாகன உற்பத்தினர்கள் தெரிவித்து இருக்கின்றன.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை சமாளிக்கவும் இன்று எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன. உலகின் மிகப் பிரதான வர்த்தக நடவடிக்கையாக எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மாறி இருக்கிறது.
இவ்வாறு பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் வாகனங்களில் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. லித்தியம் அயன் பேட்டரி குறைந்த அளவு எடை கொண்ட பேட்டரியில் கூட அதிக செயல் திறனைச் சேகரிக்க முடியும். ஆனால் அதனுடைய விலை மிக அதிகம் உள்ளது. இதற்கான மூலப்பொருள் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலே அதிக உற்பத்தி செய்யப்படுவதால் இதற்கான செலவு அதிகரிக்கிறது.
இந்த நிலையில் செலவை குறைக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தவும் சோடியம் அயன் பேட்டரிகள் உடைய ஆராய்ச்சி தற்போது உலகம் முழுவதும் பெருமளவில் நடத்தப்பட்டு வருகிறது.
சீனா நிறுவனங்கள் பெரும்பான்மையான சோடியம் பேட்டரி பயன்பாட்டிற்கான காப்புரிமை பெற்றிருப்பதால் சீன வாகன நிறுவனங்கள் சோடியம் அயன் பேட்டரி கொண்ட வாகனங்களை உற்பத்தி செய்ய முனைப்பு காட்டுகின்றன. வாகனங்களில் சோடியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படும் பட்சத்தில் வாகனங்களுடைய விலை குறையும் என்றும், மேலும் காற்று மாசு முற்றிலும் தடுக்கப்படும் என்றும், இந்த வகை பேட்டரிகள் பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. சோடியம் அயன் பேட்டரியின் பிரதான மூலப்பொருள் உப்பு ஆகும். உப்பு எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால் இதன் விலை பெருமளவில் குறையும்.
அதே நேரம் சோடியம் அயன் பேட்டரியில் அதிக எடை கொண்ட பேட்டரி கூட குறைந்த அளவு செயல் திறனை தான் சேமிக்க முடியும். தற்போது இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆய்வு பணியை ஆராய்ச்சியாளர்கள் தீவிரப்படுத்தி இருக்கின்றனர். 2030-ம் ஆண்டிற்குள் உலகின் பெரும்பகுதி எலக்ட்ரிக் வாகனங்களில் சோடியம் அயன் பேட்டரி பயன்பாட்டுக்கு வரும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்து இருக்கின்றன.