

தற்போது உலக அளவில் அனைவர் வாயிலும் உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தையாக ஹார்முஸ் ஜலசந்தி என்ற இடம் உள்ளது. பாரசீக வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் குறுகலான ஆனால் முக்கியமான கடல் பாதையாக ஹார்முஸ் ஜலசந்தி (strait of Hormuz) உள்ளது. ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையே இப் புகழ்பெற்ற ஜலசந்தி உள்ளது. சுமார் 33 கிமீ அகலம் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியின் வடக்கு பகுதியில் ஈரானும் தெற்கு பகுதியில் ஓமனும் ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) உள்ளன.
இந்திய பெருங்கடலுக்கு செல்லும் ஒரே முக்கிய வழித்தடமாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகில் சுமார் 20 சதவிகித கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.
இயற்கை எரிவாயுவிலிருந்து திரவமாக்கல்
நாம் பயன்படுத்தும் இயற்கை எரிவாயு அப்படியே வளைகுடா நாடுகளில் இருந்து வருவதில்லை. முதலில் வளைகுடா நாடுகளில் இயற்கை எரிவாயு எடுக்கப்பட்டு மைனஸ் 162 டிகிரி (162) செல்சியஸ்க்கு குளிரூட்டப்பட்ட திரவமாகப்படுகிறது. இது எல்.என்.ஜி (Liquefied Natural Gas)என்று அழைக்கப்படுகிறது.
திரவமாக்கப்படுவதன் நன்மைகள்
வாயு நிலையில் இருக்கும் எரிவாயுவை திரவ நிலைக்கு மாற்றுவதால் 600 மடங்கு இடத்தை சேமிக்கலாம். மேலும் இதனால் எளிதாக கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யமுடியும். எல் .என். ஜி நிறமில்லாமல், மணமில்லாமல் நச்சுத்தன்மையற்றமாக இருப்பதால் இவற்றை கொண்டு வருவது மிகவும் பாதுகாப்பானது. மேலும் நிலக்கரி எண்ணையுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான அளவு கார்பன் உமிழ்வை வெளியிட்டு தூய்மையான எரிபொருளாக கருதப்படுவதால் வளைகுடா நாடுகளில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயு திரவமாக்கப்படுகிறது.
இந்த எல். என். ஜி இதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு கப்பல்கள் வாயிலாக வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தஹேஜ் முனையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. திரவ நிலையில் இருக்கும் எல்.என்.ஜி மீண்டும் எரிவாயுவாக்கி நம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பெட்ரோனட் நிறுவனம் அனுப்புகிறது.
போக்குவரத்திற்கு எப்போதும் திறந்தே இருக்கும் ஹார்மூஸ் ஜலசந்தி அமெரிக்கா - ஈரான் போரின் காரணமாக ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதால் ஹார்மூஸ் ஜலசந்தி ஸ்தம்பித்து போய்விட்டது.
கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுடன் நீண்ட கால ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ள இந்தியாவிற்கு ஹார்மூஸ் ஜலசந்தி வாயிலாக எல்.என்.ஜி. வந்து கொண்டிருந்தது. போரின் காரணமாக எல் என் ஜி முடங்கியதால் நம் நாட்டில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி குழாய், தரைவழி விநியோகம் என்ற எந்த வசதியையும் இந்தியா ஏற்படுத்தி வைக்காமல் ஹார்மோஸ் ஜலசந்தியை மட்டும் நம்பி இருந்ததால் இன்று ஈரானில் நடக்கும் போர் காரணமாக நம் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இந்தியா அத்தியாவசிய பொருளான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுக்கு கண்டிப்பாக மாற்று வழியை தேடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.