

சீனா தனது கச்சா எண்ணெய் தேவையில் 70% க்கும் மேலாக இறக்குமதியை நம்பியுள்ளது. ஈரானுக்கு எதிரான போர் மற்றும் பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக தனது எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய மாற்று வழிகளைக் கண்டறிந்துள்ளது.
ஷாங்காயைத் தளமாகக் கொண்ட கார்பனாலேஜி (Carbonology ) நிறுவனம் காற்று, நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி செயற்கை எரிபொருளை மலிவு விலையில் தயாரிக்கும் புரட்சிகரமான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. 2024 இல் முன்னாள் டெஸ்லா நிர்வாகியால் தொடங்கப்பட்ட இந்த ஸ்டார்ட்-அப், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் உற்பத்தியை அதிகரிக்கத் தயாராகி வருகிறது.
காற்று மற்றும் நீரிலிருந்து கார்பன் டை ஆக்சைடை பிரித்தெடுத்து அதை பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள் மற்றும் பிற பொருட்களாக மாற்றும் ஒரு முறையை உருவாக்கியுள்ளது. எரிபொருளாக மாற்றும் இந்த தொழில்நுட்பம் வழக்கமான பெட்ரோல், டீசல் தயாரிப்பிற்கு மாற்றாக கார்பன் சமநிலை எரிபொருளை உருவாக்குகிறது. கச்சா எண்ணைய் இறக்குமதியை நம்பி இருக்கும் நிலையை மாற்றி, சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க உதவும்.
இந்த நிறுவனம் தற்பொழுது பெரிய அளவில் உற்பத்தியைத் தொடங்கி, எரிபொருள் சந்தையில் கச்சா எண்ணெய்க்கு போட்டியாக மலிவு விலையில் எரிபொருளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. சந்தையில் விற்கப்படும் சாதாரண பெட்ரோல் விலைக்கு இணையாக செயற்கை எரிபொருளை தயாரிக்கும் செலவைக் குறைத்துள்ளதாக உரிமை கோரியுள்ளது. ஆனாலும் விரிவான தொழில்நுட்ப தகவல்களைப் பற்றி அவை இன்னும் பகிரவில்லை.
தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது தெரியுமா?
வெறும் காற்றையும் நீரையும் பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசலை உருவாக்கும் புதிய தொழில்நுட்பத்தை சீனாவைச் சேர்ந்த கார்பனாலஜி என்ற நிறுவனம் கண்டறிந்துள்ளது. காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடை (CO2) அதிநவீன இயந்திரங்கள் மூலம் பிரித்தெடுத்து, அதனுடன் நீரில் இருந்து பிரிக்கப்படும் ஹைட்ரஜனை இணைப்பதன் மூலம் இந்த திரவ எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்கு சூரிய ஒளி மற்றும் காற்றாலை போன்ற இயற்கை எரிசக்தி ஆதாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எரிபொருளை பயன்படுத்த வாகனத்தின் இஞ்சினில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் செயற்கை எரிபொருட்களை உற்பத்தி செய்வது இன்னும் விலை உயர்ந்ததாகவும், அவற்றுக்கு அதிக அளவு ஆற்றல் தேவைப்படுவதாகும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த செயல்திறன், அதிக செலவுகள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றாக்குறை போன்ற சவால்கள் இருப்பினும் கார்பனாலஜி நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை வணிகப் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நோக்கத்தில் ஷாங்காயில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது.