இந்தியாவிலேயே முதல்முறையாக ட்ரோன் பரிசோதனை மையம் தமிழகத்தில் அமைய உள்ள நிலையில், இது ஏன் குறிப்பாக தமிழகத்தில் அமைக்கப்படுகிறது என்பதற்கான காரணங்கள் நம்மை வியக்க வைக்கிறது.
பொதுவாகவே நம்முடைய தமிழகம் என்றாலே எலக்ட்ரானிக் தொழிற்சாலைகள் மற்றும் கனரக வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதி. அதிலும் குறிப்பாக சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் பல தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. கார் நிறுவனங்கள் அதிகமாக இந்தியாவுக்கு வந்தபோதும் அதற்கான தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் அமைந்தது. எனவே இனி எதிர்காலத்தில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால், அதை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கான இடமாகவும் தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சில கணிப்புகளின் படி ட்ரோன் தொழில் ஒவ்வொரு வருடமும் 22 சதவீதம் வரை உயரம் எனவும், அது 2025 ஆம் ஆண்டுக்குள் 28 ஆயிரம் கோடி சந்தை மதிப்பைப் பெரும் என்றும் தெரியவந்துள்ளது. அதாவது பறக்கும் ட்ரோன்கள் இனி அதிக மக்களுடைய பயன்பாட்டில் இருக்கப் போகிறது என அர்த்தம். இனி எதிர்காலத்தில் பொருட்களை டெலிவரி செய்வதற்கும், சாப்பாடு எடுத்துச் செல்வதற்கும் ட்ரோன்களே பயன்படுத்தப்படவிருக்கிறது. தற்போது எப்படி ஒவ்வொரு வீட்டிலும் செல்போன் இருக்கிறதோ அதேபோல எதிர்காலத்தில் அனைவரது வீட்டிலும் ட்ரோன்கள் இருக்கும் என்றும் சொல்லலாம்.
நம்முடைய தமிழ்நாட்டில் பல எலக்ட்ரானிக் சாதனங்களின் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சார்ந்த நிறுவனங்கள் இருப்பதால், இந்தியாவிலேயே முதன்முறையாக ட்ரோன் சோதனை மையம் தமிழகத்தில் அமைய இருக்கிறது. எனவே இனி ட்ரோன்களின் தேவைக்கு இந்திய வெளிநாடுகளை சார்ந்திருக்கத் தேவையில்லை.
இதற்கான சோதனை மையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கிறது. இதனால் ஆளில்லா விமான உற்பத்தியிலும், பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்தச் சோதனை மையம் வழிவகுக்கும்.