மார்ச் மாதம் ரிச்சர்ட் ஸ்லேமேன் என்பவர் முதல்முறையாக பன்றியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார். அதன்பின்னர் இரண்டு மாதங்கள் கழித்துத் தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.
62 வயதான ஸ்லேமேன் அமெரிக்கா நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்டார். இவர்தான் உலகிலேயே முதன்முதலாகப் பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திக்கொண்டவர் ஆவார். பாஸ்டன் நகரில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் சுமார் 4 மணி நேரமாக அறுவை சிகிச்சை நடந்தது. இது வெற்றிகரமாக நடந்து முடிந்ததால், மருத்துவத்துறையின் சாதனையாகக் கருதப்பட்டது.
இந்தச் சூழலில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இரண்டு மாத காலத்திற்குள் அவர் உயிரிழந்தார். உறுப்பு மாற்று சிகிச்சையின் விளைவுதான் அவரது மரணத்திற்கு காரணம் என்று சொல்வதற்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு அவருக்கு சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், ஐந்து ஆண்டுகளில் அது செயலிழந்தது. இதனால், அவர் உடல்நிலை மோசமாக மாறியது. தொடர்ந்து டயலஸிஸ் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த மார்ச் மாதம் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. கடந்த 2022-ல் அமெரிக்காவின் மேரிலேண்ட் மருத்துவமனையில் பன்றியின் இதயம், நோயாளி ஒருவருக்குப் பொருத்தப்பட்டது. அவரும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இரண்டு மாத காலத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விலங்குகளின் செல், திசு அல்லது உறுப்புகளை நோயாளிகளுக்கு மாற்றிக் அவரைக் குணப்படுத்தும் முறை `xenotransplant’ என அழைக்கப்படுகிறது. xenotransplant-ல் உள்ள சிக்கல் என்னவென்றால், மனிதரின் நோயெதிர்ப்பு அமைப்பு விலங்கின் திசுக்களை உடனடியாக அழிக்கத் தொடங்கும். இதனாலேயே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு உறுப்புகளை மாற்றும் முயற்சிகள் நீண்ட காலமாகத் தோல்வியடைந்து வருகின்றன. ஆனால், பன்றியின் சிறுநீரகம் மனிதனைப் போலவே உள்ளதால் அவற்றை மாற்றி வைக்க மருத்துவர்கள் முயற்சி செய்கின்றனர்.
இந்த xenotransplant முறையை 1980ம் ஆண்டு முதன்முதலில் மனிதர்களிடம் முயற்சி செய்து பார்த்தனர். கொலம்பியா பல்கலைகழகத்தின் அறுவை சிகிச்சை துறை, நரம்புக் கடத்தல் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றிற்கு விலங்கு செல்கள் மற்றும் திசுக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று கூறுகிறார்கள்.
இருப்பினும், அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையால், இந்த விபரீதம் ஏற்படவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், அவர் இறப்பிற்கு என்ன காரணம் என்றும் இதுவரை தெரியவில்லை.