
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் வரிசையில் உலகளவில் பிரபலமானது தான் டிக்-டாக் செயலி. சீனாவில் உருவாக்கப்பட்ட இந்த செயலி வெகு விரைவிலேயே உலகம் முழுக்க மில்லியன் கணக்கான பயனாளர்களைத் தன்வசப்படுத்தியது. இருப்பினும் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்பட சில நாடுகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்-டாக் செயலி தடை செய்யப்பட்டது. இப்போது இந்த செயலியின் தற்போதைய நிலைமை என்ன? எங்கெல்லாம் இந்த செயலி உபயோகத்தில் இருக்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.
சீனாவில் இருக்கும் பைட் டான்ஸ் (Byte Dance) என்ற நிறுவனம், முதன் முதலில் Douyin என்ற பெயரில் ஒரு பொழுதுபோக்கு ஆன்லைன் செயலியை உருவாக்கியது. தொடக்கத்தில் இது யூடியூப்க்கு போட்டியாகத் தான் உருவானது. ஆனால், இதில் சிறு சிறு மாற்றங்களைச் செய்து மேம்படுத்திய பின் உலகளவில் பிரபலமாகி விட்டது. பிறகுதான் இந்த செயலியின் பெயரும் டிக்-டாக் என மாறியது.
டிக்-டாக் செயலியில் பதிவேற்றும் அனைத்து வீடியோக்களையும் தனித்தனிப் பிரிவுகளாகத் தொகுத்து, பயனாளர்கள் விரும்பும் வண்ணம் வீடியோக்களை வரிசைப்படுத்தி காட்டியது இந்நிறுவனம். அன்றிலிருந்து சீனா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள இளசுகள் இந்த செயலிக்கு அடிமையாகி விட்டனர். வீடியோக்களை உருவாக்கி சமூக வலைதளத்தில் பலரும் பிரபலமானார்கள்.
ஒரு சமயம் சீனா இராணுவம் இந்திய எல்லைகளில் அத்து மீறி நுழைந்தது. அதோடு பயனர்களின் தகவல்களையும் சீன செயலிகள் அபகரித்தன. இதனால் வெகுண்டெழுந்த இந்தியா டிக்-டாக் உள்ளிட்ட பல சீன செயலிகளைத் தடை செய்தது. இது டிக்-டாக் பயனர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், சீன செயலிகள் பாதுகாப்பற்றவை என்பதை இந்தியர்கள் புரிந்து கொண்டனர். அதோடு இந்த செயலி அமெரிக்காவிலும் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கான தடை தற்காலிகமாக நீக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எதைப் பற்றியும் கவலை கொள்ளாத டிக்-டாக் நிறுவனம், செயலியை மேலும் மெருகேற்றும் வேலைகளில் ஈடுபட்டது. தற்சமயம் அமெரிக்கா உள்பட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் டிக்-டாக் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 30.95% சமூக ஊடகப் பயனர்களையும், 29.15% இணையப் பயனர்களையும் டிக்-டாக் செயலி கொண்டுள்ளது. இந்நிறுவனம் நம்பகத்தன்மையற்ற வீடியோக்களையும் மட்டுமே டிக்-டாக் பரப்பி வருவதாக பல நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இருப்பினும் டிக்-டாக் செயலியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. மேலும் டிக்-டாக் செயலியில், அதிகப் பார்வைகளைப் பெறுவதற்காக பலரும் தவறான விஷயங்களிலும் ஈடுபடுகின்றனர்.
சமூக வலைதளங்கள் இன்றைய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இருப்பினும் இதில் சில பொய்யான தகவல்களும் பரப்பப்படுகின்றன. இந்தத் தகவல்களைப் பார்க்கும் பயனர்கள், அதனை உண்மை என்றே நம்புகின்றனர். எந்தத் தகவலையும் அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல், ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஒரு செயலியை நாம் பயன்படுத்தும் போது, அதனால் ஏதேனும் ஆபத்துகள் ஏற்படுமா என்பதை உணர்ந்து பயன்படுத்த வேண்டும். அதையும் மீறி ஏதேனும் தவறு நிகழ்ந்தால், அதனை எதிர்கொள்ளும் மனப்பான்மையுடன் இருப்பது அவசியம்.