
உங்களுடைய பள்ளி அல்லது கல்லூரி வகுப்பறையில் எத்தனை மாணவர்கள் இருந்தார்கள்?
ஐம்பது? நூறு? அதற்குமேல் மாணவர்கள் இருந்தால் ஆசிரியர்களால் அனைவருக்கும் முழுக் கவனத்தை வழங்கிப் பாடம் நடத்த இயலாது. அதனால், ஒரு வகுப்பறை என்பது இந்த அளவில்தான் இருக்கவேண்டும் என்கிற வரம்பு இருக்கிறது.
ஆனால், இதெல்லாம் பழைய கதை. இன்றைக்கு ஆயிரக்கணக்கானோர், லட்சக்கணக்கானோர் ஒரே வகுப்பில் அமர்ந்து படிக்கிற வகுப்பறைகள் வந்துவிட்டன. டிஜிட்டல் தொழில்நுட்பம் அதற்கு வழிசெய்துள்ளது. அதன் மூலம் உலகெங்கும் ஏராளமானோருக்குப் புதிய வாசல்கள் திறக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, நீங்கள் சந்தைப்படுத்துதலைக் (மார்க்கெட்டிங்) கற்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முன்பு நீங்கள் இதற்கென்று ஒரு கல்லூரியில் பணம் கட்டிச் சேரவேண்டியிருக்கும். அப்படி ஒரு கல்லூரி உங்கள் ஊரில் இருக்கவேண்டும். அதில் சேரத் தேவையான வயது, கல்வித் தகுதி, குறைந்தபட்ச மதிப்பெண் போன்றவை உங்களிடம் இருக்கவேண்டும். இல்லாவிட்டால், உங்களால் விரும்பியதைப் படிக்கமுடியாது.