
ஒரு கல்லூரியில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சேர்ந்து பயில்கிறார்கள். இவர்கள் எல்லாரும் ஒரே மாதிரியான திறமையுடன் இருப்பதில்லை. சிலருக்குச் சிறு கோடு போட்டால் போதும், மற்றதைத் தாங்களே படித்துக்கொள்வார்கள். வேறு சிலருக்கு ஓரளவு வழிகாட்டுதல் தேவை. இன்னும் சிலருக்கு ஒருமுறைக்குப் பத்துமுறை சொல்லிக்கொடுத்தால்தான் புரியும்.
அதனால், அந்தக் கல்லூரியில் இருக்கும் ஆசிரியர்கள் தங்களிடம் பயில்கிற மாணவர்களைக் கூர்ந்து கவனித்து யாருக்கு எவ்விதமான பயிற்சி தேவை என்று தீர்மானிப்பார்கள். அதற்கேற்பத் தங்களுடைய நேரத்தைப் பிரித்துச் சொல்லித்தருவார்கள். அதன்மூலம் எல்லா மாணவர்களும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற உதவுவார்கள்.
ஆனால், எல்லா ஆசிரியர்களுக்கும் இப்படிப் பகுத்துப் பார்க்கும் திறமை இருக்கும் என்று சொல்வதற்கில்லை. ஒருவேளை, இல்லாவிட்டால்? அல்லது, அவர்கள் தவறு செய்துவிட்டால்? நிறைய உதவி தேவைப்படும் மாணவருடைய நிலைமை என்ன ஆகும்?
சில ஆண்டுகளுக்குமுன், ஐவி டெக் என்ற கல்லூரி இதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறது. தன் மாணவர்களில் கூடுதல் உதவி தேவைப்படுகிறவர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு உதவுவதற்கு இயந்திரக் கற்றல் (Machine Learning) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. இதன்மூலம், வகுப்புகள் தொடங்கி இரண்டு வாரங்களுக்குள் எந்தெந்த மாணவர்கள் அந்த அரையாண்டில் தோல்வியடையக் கூடும் என்பதை 60லிருந்து 70% துல்லியமாகக் கண்டுபிடித்துவிட்டார்களாம். அதன்பிறகு, அந்த மாணவர்களுக்குச் சிறப்புக் கவனம் கொடுக்கப்பட்டு அவர்களுடைய கல்வித்திறன் மேம்படுத்தியிருக் கிறார்கள்.