தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்; பாண்டவர் அணி அமோக வெற்றி!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்; பாண்டவர் அணி அமோக வெற்றி!

-பிரமோதா.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் நேற்று(மார்ச் 20) வெளியாகி, நடிகர் விஷால், நாசர் உள்ளிட்ட பாண்டவர் அணி அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டு 3 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், அந்த தேர்தல் செல்லுபடியாகும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், 2019-ம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் வாக்குகள் நேற்று (மார்ச் 20) எண்ணப்பட்டன. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர்கள் அணியும் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் இரண்டு அணிகளாக தேர்தலில் போட்டியிட்டனர். இதில் பாண்டவர்கள் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகன்ஆகியோர் போட்டியிட்டனர்.

சங்கரதாஸ் சுவாமிகள் அணியில் தலைவர் பதவிக்கு பாக்கியராஜும் பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரிகணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரசாந்த் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு குட்டிபத்மினி மற்றும் உதயா ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டதில் பாண்டவர்கள் அணியினர் அபார வெற்றி பெற்றுள்ளனர். நாசர், கார்த்தி, விஷால், பூச்சிமுருகன், கருணாஸ் என முக்கிய பொறுப்புகளுக்கு போட்டியிட்ட அனைவரும் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி  பெற்றுள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் வெளியான நிலையில் எதிர அணியினர் தொடர்ந்து தேர்தல் முறைகேடுகள் குறித்த கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் வெற்றி பெற்ற நடிகர் நாசர் மற்றும் கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது நாசர் தெரிவித்ததாவது;

''தென்னிந்திய நடிகர் சங்கத்தில் வருங்காலத்தில் காத்திருப்பு குறைந்து வேலைகள் எல்லாம் விரைவில் நடக்கும் என்று நினைக்கிறோம், இனி நாங்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த எண்ணம் மட்டுமே  இருக்கும். நாங்கள் எடுத்துக் கொண்ட பளு வெகு அதிகமானது, எங்களின் 3 ஆண்டு பதவிகாலத்தில் நிறைய செய்ய நினைக்கிறோம். எங்களின் பதவியேற்பு விழா குறித்து சட்டரீதியாக அமைக்கப்பட்ட குழுமூலமாக அரசாங்கத்தோடு ஆலோசித்து அறிவிப்புகள் வெளியிடப்படும். அரசாங்கத்திடம் உதவிகள் பெறவேண்டிய நிலை இருக்கிறது. எங்கள் பணிகளை வெகு விரைவாக எடுத்து செல்ல உதவும் வகையில் அணி பாகுபாடு எங்களுக்குள் இருக்காது. சிறுபிள்ளை தனமாக கோவப்பட மாட்டோம்,யார்பொறுப்பு ஏற்றுகொண்டாலும் அதற்கான வேலைகளை திறம்பட செய்வோம்''

-இவ்வாறு நடிகர் நாசர் தெரிவித்தார்.

இந்த நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறீகேடுகள் நடந்ததாக எதிரணியான சங்கரதாஸ் அணியினரின் குற்றச்சாட்டிற்கு தேர்தல் அலுவலரான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மறுப்பு தெரிவித்தார்.

''வாக்கு எண்ணிக்கையில் எவ்வித குளறுபடியும் நடைபெறவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு வாய்ப்பு இல்லை, பதிவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டது'' என அவர்தெரிவித்தார்.

இந்நிலையில் இத்தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் விஷால் ஐதராபாத்தில் படப்பிடிப்புக்கு இடையில் கேக்வெட்டி கொண்டாடினார். அவருக்கு படக்குழுவினர் மற்றும் நண்பர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com