வேத பிரம்மத்துடன் நாத உபாசனை: வித்வான் பி.ராஜம் அய்யர் நூற்றாண்டு விழா!

வேத பிரம்மத்துடன் நாத உபாசனை: வித்வான் பி.ராஜம் அய்யர் நூற்றாண்டு விழா!

-சுமதி சுந்தரம்.

ங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் தினம். சென்னை கச்சேரி ஒன்றில் அந்த பிரபல பாடகர் தீஷிதர் க்ருதிகளை அற்புதமாகப் பாட, நேரம் போனதே தெரியவில்லை. கச்சேரி முடிந்ததும்  வழக்கம் போல சபா கார்யதரிசி சன்மான உறையை பக்கவாத்ய கலைஞர்களிடம் கொடுத்துவிட்டு, பாடகரிடம் வந்தார். ஆனால் அந்த விதவான் சன்மானம் வாங்கிக் கொள்ளாமல் பணிவுடன் மறுத்துவிட்டார். 

''தீஷிதர் க்ருதிகளை இன்று ஆத்மார்த்தமாக பாட ஒரு வாய்ப்பு கொடுத்ததையே பெரிய சன்மானமாக கருதுகிறேன். தவறாக எண்ண வேண்டாம்'' எனக் கேட்டுக் கொண்டார். இப்படியும் ஒரு இசைக்கலைஞர் இருக்க முடியுமா என்றால் அவர்தான் – வித்வான் பி. ராஜம் அய்யர். 

சங்கீத கலாநிதி பத்மபூஷன் பி. ராஜம் ஐயரின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக நாரத கான சபாவில் இரு தினங்களுக்கு முன் நடந்தது. 

கர்நாடக இசை உலகின் பிரபலங்கள் கலைமாமணி ஸ்ரீ குருவாயூர் துரை, சங்கீத கலாநிதி வயலின் ஸ்ரீ சந்திரசேகர், சங்கீத கலாநிதி ஸ்ரீ டி.வி.  கோபாலகிருஷ்ணன், திரு. நல்லிகுப்புஸ்வாமி, ஜோதிடர் ஹரிகேசவ நல்லூர் வெங்கடராமய்யார், இசைப் புலவர் வி.வி. சுந்தரம் மேலும் ராஜம் ஐயரின் ப்ரதான சிஷ்யரான திரு வீர ராகவன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கிணயவர் கர்நாடக இசைக் கலைஞர் நாமகிரி ரமேஷ்.

மாலை 5.30 மணி அளவில் குத்துவிளக்கேற்றி விழா துவக்கி வைக்கப்பட்டது. மேடையை அலங்கரித்திருந்த இசை மேதைகள் அனைவரும் ராஜம் ஐயருடனான தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 

ராஜம் ஐயரின் சிஷ்யரான வீரராகவன், தன் குருவின் நினைவுகளை பகிர்கையில், ''என் குரு எப்போதும் என்னை ராகவா ராகவா என் வாத்ஸல்யமாக அழைப்பார். அவர்  வேத ப்ரம்மத்தோடு நாத ப்ரம்மத்தையும் உபாஸனை செய்தவர். பகவானைக் காட்டிலும் ஆச்சார்யாள் சேவை மிக மிக பாக்யம். அது எனக்கு கிட்டியது. குரு கடாக்ஷம் பேரானந்தம் என்பது புரிந்தது'' என மனம் நெகிழ்ந்து கூறினார்.

இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "அம்ருத கான மஞ்சரி" என்ற புஸ்தக வெளியீட்டு விழாவும் மிக சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸங்கீத ஸத்ஸங்கத்தில் கச்சேரி இல்லாமலா? சங்கீத கலாநிதி' டாக்டர். எஸ். சவுமியாவின் பாட்டுக் கச்சேரி களைகட்டியது. பக்கவாத்யமாக, ஸ்ரீ எம்பார் கண்ணன் வயலின், ஸ்ரீ நெய்வேலி நாராயணன் மிருதங்கம்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (மே 22) மயிலாப்பூரில் உள்ள ராகசுதா ஹாலில் நவா வர்ண சிறப்பு பூஜையும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com