தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் மகள் ஜெய கல்யாணி பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த்திடம் பாதுகாப்பு கோரி மனு கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து ஜெய கல்யாணி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழக அமைச்சர் சேகர் பாபுவின் மகளான நானும் சதீஷும் ஆறு வருடங்களாக காதலித்து வருகிறோம். ஆனால் காதலுக்கு எங்கள் வீட்டில் எதிர்ப்பு என்பதால், நாங்கள் மூன்று நாட்களுக்கு முன்னதாக வீட்டை விட்டு வெளியேறி ஒருவரையொருவர் விரும்பித் திருமணம் செய்து கொண்டிருக்கிறோம்.
என் தந்தை தமிழகத்தில் அமைச்சராக இருப்பதால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவ முன்வராது என்பதால்தான் கர்நாடகாவிற்கு வந்திருக்கிறோம் . பெங்களூரு எங்களுக்கு பாதுகாப்பும் உதவியும் கேட்டு மனு கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு கொலை மிரட்டல் வருவதால் கர்நாடக போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
நாங்கள் இருவரும் விரும்பி திருமணம் செய்து கொண்டுள்ளதால், என்னையும் என் கணவரின் குடும்பத்தினரையும் யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என கோரிக்கை வைத்திருக்கிறோம்.
-இவ்வாறு ஜெய கல்யாணி தெரிவித்தார்.