
கச்சத்தீவிலுள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் விமர்சையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இத்திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்களும் அனுமதிக்கப்படுவர்.அந்த வகையில் இன்று மாலை நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழாவின் தொடக்கநாள் விழாவில் கலந்துகொள்ள தமிழக மீனவர்கள் கச்சத்தீவு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத்தினர் தெரிவித்ததாவது:
கச்சத்தீவு புனித அந்தோணீயார் ஆலயத்தில் இரண்டு நாட்களுக்கு திருவிழா நடைபெற்வுள்ளது. இத்திருவிழாவில கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து கச்சதீவு செல்ல 100 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து 81 பக்தர்கள் ஒரு நாட்டுப் படகு மற்றும் இரண்டு விசைப்படகுகளில் கச்சத்தீவு செல்ல உள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு திருவிழா நடைபெறுகிறது.
தொடக்கத்தில் இந்த ஆண்டு தமிழக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இலங்கை அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழக மற்றும் மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக தமிழக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-இவ்வாறு ராமேஸ்வரம் மீன்வர்கள் தெரிவித்தனர்.