150 கிலோ கஞ்சா: பிரபல யூடியூபர் நாகை மீனவன் படகில் பறிமுதல்!

150 கிலோ கஞ்சா: பிரபல யூடியூபர் நாகை மீனவன் படகில் பறிமுதல்!
Published on

யூடியூபில் நாகை மீனவன் என்று பிரபலமாக அறியப்படும் குணசீலன் என்பவரது படகிலிருந்து 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகையிலிருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டது. காவல்துறை ஆய்வாளர் மாசிலாமணி தலைமையில் சுங்கத்துறை அதிகாரிகள் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 26) முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று முந்தினம் ( செப்டம்பர் 28) இரவு மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் கண்ணாடி நாரிழை படகு ஒன்றில் கஞ்சா மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த படகில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், படகில் இருந்த 15 கிலோ கஞ்சா கொண்ட 10 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அதே போல, 4 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது:

யூடியூபில் நாகை மீனவர் என்ற சேனலை நடத்திவரும் குணசீலன் (26) என்பவரது படகில் கஞ்சா கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. யூடியூப் சேனலை நடத்துவதாக கூறி ஃபைபர் படகை கஞ்சா கடத்துவதற்கு அவர் பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com