

டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே உலகின் பல்வேறு நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்ட தொடங்கிவிடும். இந்த பண்டிகை காலம் ஆரம்பித்தாலே வீடுகள் மற்றும் நகர வீதிகளில் கிறிஸ்துமஸ் மரம் (Christmas tree) வைத்து அதில் வண்ண விளக்குகளால் அலங்காரங்கள் ஜொலிக்கும்.
பனி மழையில் நனைந்த 'பிர்' மரங்களை கண்டு மயங்கிய ஜெர்மன் நாட்டின் மன்னர் 1500 ம் ஆண்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக 'பிர்' மரத்தை அலங்கரித்து தன் அரண்மனை முன் வைத்தார். பின்னர், ஜெர்மனியில் 1521-ல் முதன்முதலில் சர்ச் ஒன்றில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்தில் விக்டோரியா மகாராணி மற்றும் இளவரசர் ஆல்பர்ட் மூலம் பிரபலமானது. இந்த பாரம்பரியம் இறுதியில் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியது. இதனை தொடர்ந்து 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிலும் இந்த கிறிஸ்துமஸ் மரம் அலங்காரம் பிரபலமானது.
கிறித்துமஸ் பண்டிகையின் போது ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் கிறித்துமஸ் மரங்களை வைத்து அதில் பல வண்ண விளக்குகள் மற்றும் பொருட்களை கொண்டு அலங்காரம் செய்து வைப்பர். பொதுவாக வீடுகளில் ஒன்று அல்லது இரண்டு கிறிஸ்துமஸ் மரம் வைப்பது வழக்கம். ஆனால், ஒரு ஜெர்மன் ஜோடி தங்களது ஜெர்மனியின் ஹனோவரின் மேற்கே உள்ள ரிண்டெல்னில் உள்ள தங்கள் வீட்டில் 621 கிறித்துமஸ் மரங்களை வைத்து சாதனை படைத்துள்ளனர்.
மரம் சேகரிப்பாளர்களான தாமஸ் மற்றும் சூசன் ஜெரோமின் என்ற ஜெர்மன் தம்பதி தங்களது 105 சதுர அடி வீட்டை 621 கிறிஸ்துமஸ் மரங்கள், ஃபேரி விளக்குகள் மற்றும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பாபிள்களால் அலங்கரித்துள்ளனர். இந்த ஜோடியின் சேகரிப்பு மிகவும் பிரமாண்டமானது. மேலும் இத்தனை மரங்களை அலங்காரம் செய்ய அவர்களுக்கு சுமார் எட்டு வாரங்கள் எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
முழுமையாக அலங்கரிக்கப்பட்ட 621 மரங்களை ஒரே கூரையின் கீழ் நட்டதற்காக, ஜெர்மனியின் ரெக்கார்ட் இன்ஸ்டிடியூட் (RID) ஆல் முடிசூட்டப்பட்ட அதிகாரப்பூர்வ உலக சாதனையாளர்களாக சூசன் மற்றும் தாமஸ் ஜெரோமின் ஆகியோர் உள்ளனர். இவர்களது வீட்டினுள் நுழையும் போது ஒரு வட துருவம் போன்ற ஒன்றில் நுழைந்த உணர்வை உடனடியாகப் பெறுவீர்கள் என்கிறார்கள்.
உயரமான தேவதாரு மரங்களால் நிரம்பிய வரவேற்பு அறை முதல் மாயாஜால குளிர்கால குகை போல ஒளிரும் அலுவலகம் வரை ஒவ்வொரு அறையும் மின்னும் விளக்குகளாலும் பண்டிகை உற்சாகத்தாலும் ஜொலிக்கிறது இந்த தம்பதிகளின் வீடு.