சென்னையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிக்க இருநூறு மருத்துவக் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:
சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் வீட்டிற்கே சென்று முதற்கட்ட பரிசோதனை செய்வதற்காக மருத்துவர்கள் – செவிலியர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஒரு வார்டுக்கு ஒரு குழு வீதம் இருநூறு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த மருத்துவக் குழு கொரோனா நோய்த் தொற்று உள்ளவரை வீட்டிற்கே சென்று உடல்நிலையைக் கண்காணிக்கும். மேலும் வீட்டுத் தனிமையில் உள்ளவருக்கு ஆக்சிஜன் அளவு கண்கானிப்பு, மற்றும் மருத்துவமனை சிகிச்சை அவசியமா என்பதை இந்த மருத்துவக்குழு பரிசோதனை செய்து பரிந்துரைகளை வழங்கும்.
மேலும், வீட்டுத் தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்கவும் உதவவும் இருநூறு தன்னார்வலர்கள் குழுக்கள் உருவாக்கப் பட்டுள்லன. இந்த மருத்துவக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுக்கள் இன்று முதல் களப்பணிகளை தொடங்கியுள்ளனர்.
–இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.