

50 ஆண்டுகள் ,100- ராக்கெட்கள் 500 க்கும் மேற்பட்ட செயற்கை கோள்கள் இந்திய விண்வெளி பயணத்தில் இஸ்ரோவின் இமாலய சாதனை...!
1969-ம் ஆண்டில் இஸ்ரோ நிறுவப்பட்ட நிலையில், வானவியல் துறையில் தடம் பதிக்க விரும்பிய இந்தியா, ஏப்ரல் 19, 1975 -ம் ஆண்டில் ஆர்யபட்டா (Aryabhata) என்ற முதல் செயற்கைக்கோளை உருவாக்கியது. இதனை ரஷ்யா உதவி மூலம் விண்ணில் செலுத்தியது. 1993-ம் ஆண்டு முதல் ஏவுதளத்தை அமைக்க இந்தியாவுக்கு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. இரண்டாவது ஏவுதளம் பத்தாண்டுகள் கழித்து 2004-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் விண்வெளித் துறை, முன்னெப்போதும் இல்லாத விரிவாக்கம் கண்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரோ சார்பில் ஜி.எஸ்.எல்.வி., எப்15 ராக்கெட், 2025 ம் ஆண்டு ஜன.29ம் தேதி காலை 6:23 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது. விண்வெளி துறையில் உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரோவின் 100வது ராக்கெட் அன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட், ஜி.பி.எஸ்., சேவை அளிப்பதற்கான என்.வி.எஸ்.,01 என்ற செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தியது. இந்த NVS -02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களை தெரிவிக்கும்.
இந்த 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டது விண்வெளித் துறையில் ஒரு பெரிய சாதனையைக் குறிக்கிறது. இதன் மூலம் விண்வெளி துறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்ததாக 4 வந்து இடத்தில் இந்தியா உள்ளது.
இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் தகவலின்படி, ஆகஸ்டு 10, 1979இல், எஸ்எல்வி-3 (SLV-3 E1) மூலம் ரோகிணி எனும் முதல் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அதுவே ஸ்ரீஹரிகோட்டா ரேஞ்ச்சின் முதல் ராக்கெட் ஏவுதல் நிகழ்வு. ஆனால், ராக்கெட்டின் இரண்டாவது கட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
பிறகு, 1980ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி எஸ்எல்வி - 3 (SLV-3 E2) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது ரோஹிணி - 1 (RS-1) என்ற 35 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.1987 வரை SLV-3 ராக்கெட் 4 முறை விண்ணில் ஏவப்பட்டது. ஏ..எஸ்.எல்.வி (Augmented Satellite Launch Vehicle (ASLV) என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) உருவாக்கப்பட்ட ஒரு சிறிய திறன் கொண்ட செயற்கைக்கோள் ஏவுதல் வாகனமாகும்.
பி.எஸ்.எல்.வி (PSLV) என்பது முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி (Polar Satellite Launch Vehicle) ஆகும். பி.எஸ்.எல்.வி-சி35 ராக்கெட் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டின் மூலம் ஒரே நேரத்தில் 8 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன. இந்த பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 62 முறை செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டது.
விக்ரம் சாராபாய் முயற்சியில் தொடங்கப்பட்ட ராக்கெட் கனவு திட்டம் 100ஐ தொட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இதுவரை 4 முறை எஸ்எல்வி-3, 4 முறை ஏஎஸ்எல்வி, 62 முறை பிஎஸ்எல்வி, 16 முறை ஜிஎஸ்எல்வி, 7 முறை எல்எம்வி3 (LMV3), 3 முறை எஸ்எஸ்எல்வி, ஆகியவை உள்பட 99 ஏவுதல்கள் நடந்துள்ளன. தற்போது 100 வது ஏவுதல் மூலம் இது வரை 548 செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.