நட்பெனும் நல்லறம்!

நண்பர்கள் தினம்: 06.08.2023
 நட்பெனும் நல்லறம்!

ண்மையான சான்றுகளைக் கொண்ட வரலாறு நமது நாட்டில் மிகப் பழைமை வாய்ந்ததாகும். உலகத்திற்கு நல்லறங்களைக் கற்பிக்கத் தக்க வகையில் சிறப்புடன் எழுதப்பட்டுள்ளதோடு மதிக்கவும் படுகிறது.

இலக்கியங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என பலவற்றிலும் நட்பெனும் நல்லறம் குறித்து அருமையாக பேசப்பட்டுள்ளன.

கர்ணன்

காபாரதத்தில், தன் நண்பன் துரியோதனுக்காக, தன்னுடைய உடன்பிறப்புகளுடன் போரிட்டு, தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு நட்பை கற்பென மதித்தவன் கர்ணன். செஞ்சோற்றுக்கடன் தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்தவனில்லை.

தேரோட்டி மகனென்று சொல்லித் தன் திறமையை மதிக்காதவர்களின் அவையில் அங்க தேச மன்னனாக்கி, சரி நிகர் நண்பனாக மதித்த துரியோதனனுக்கு நன்றியோடு வாழ்ந்தவன் கர்ணன்.

‘நட்பின் அறம் காத்த மறம்! (இதிகாச கால) நட்பின் சிறப்பிற்கு இலக்கணம்!”

குகன்

ராமாயணக் கதையில், ஸ்ரீராமரின் வனவாசம் சமயம், கங்கை நதியைக் கடக்க, படகோட்டியான குகனின் அன்பு நிறைந்த தொண்டில் நெகிழ்ந்த ராமபிரான், ‘இனி யாம்... குகனோடு ஐவரானோம்’ என்று கூறியது பெருமைக்குரிய செயலாகும். உயர்ந்த அரச குலத்திலுதித்த ராமபிரானோடு, ஏழை படகோட்டி குகனும் தோழமையில் ஒன்றென எண்ணி செயல்பட்டது நட்பின் பெருமையைப் போற்றும் நல்லறமாகும்.

குசேலர்

ஸ்ரீமத் பாகவதத்தில், ஸ்ரீகிருஷ்ணருக்கம் பள்ளித் தோழர் குசேலருக்கும் இருந்த ஆழ்ந்த நட்பு பாராட்டிற்குரியது.

ஏற்றத் தாழ்வற்ற நட்பு, தோழமையின் பழமை மறவாமை; போன்றவை இதிகாசங்கள் காட்டும் நட்பின் நல்லறமாகும்.

இயேசுநாதர்

யேசு நாதர் காவியத்தில், அவர் தம் சீடர்களிடம் காட்டி வந்த அன்பு, குரு – சீடன் உறவை விஞ்சிய நட்பாகும். நம்பிக்கை மேலோங்கிய நட்பு. தமது சீடர்களுக்கு அவர் அளித்த கடைசி விருந்தில், “உனது உடன்பிறப்புகளோடும், அக்கம் பக்கத்தினரோடும் இணக்கமாய் இல்லையெனில், தேவாலயத் திருப்பலிப் பூசையில் கலந்து கொள்ளாதே”  என இயேசு பெருமான் அவர்களுக்குக் கூறியது நல்லிணக்கமான நட்புறவை வளர்க்க உதவியதாகும்.

எம்.ஜி.ஆர்.

“நட்பின் தெறிவே – அவர் தம் செறிவு” என்பதற்கேற்ப, எம்.ஜி.ஆர்.திரைத்துறையில் இருந்தபோதம், அரசியலில் புதிய கட்சியமைத்து, தமிழக முதல்வரான போதும், தனக்கென ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். அவர்களின் நல்லாலோசனைகள்படியே, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி சாதனைகள் படைத்தார்.

வள்ளுவர் வழிகாட்டிய நட்பறமும், வரலாறுகள் போற்றும் நல்ல நட்பின் திறமும், பழந்தமிழர் பேணி காத்த நட்புறவுகளும், இன்றைய கணினி வாழ்க்கையில் தொலைந்து போய்விட்டன என்றாலும்,

“நண்பர்கள் நாம் தேடும் நற்செல்வத்துள் ஒன்று” என்பதற்கேற்ப, ஒத்த கருத்துடைய ஏற்ற நண்பர்களை அறிந்து, நாடி, பழகி, அவர்களை தக்க வைத்து வாழ்தல் அறிவுடையோர் நற்செயலாகும். “ஒரு நல்ல நண்பன் நூறு உறவினர்களுக்கு ஈடானவன்” என்கிற உள்ளத்து உயர்வோடு, நண்பர்களை மதிப்பதோடு, அதற்கேற்றாற்போல் நல்ல நண்பர்களாய் நாமும் வாழ்ந்திட வேண்டுமென இலக்கோடு வாழ்வதில்தான் நட்பின் வெற்றி அடங்கி இருக்கிறது.

நட்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com