ஒரு நடிகராக வாழ்க்கையைத் துவங்கி பல்வேறு பரிணாமங்களுடன் அரசியலில் கால் பதித்து தன் ஈகை குணத்தால் மக்கள் மனங்களில் இடம்பிடித்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றிய பெருமை படைத்தவர் எம். ஜி. ஆர். குறிப்பாக இவர் இறக்கும் வரை தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் இருந்தது சிறப்புக்குரியது.
இயற்பெயரான மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் என்பதே எம் ஜி ஆரானது. இன்று இவரின் பிறந்த தினம்.(17 ஜனவரி 1917 – மறைவு 24 டிசம்பர் 1987) தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்த இவர், காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
பின் 1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பிறகு அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் பாெதுச்செயலாளாராகவும் பொறுப்பேற்றார். சட்டமன்ற தேர்தலில் நின்று அரசியல் தலைவரானார்.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றுள்ள இவர் மறைந்து 30-ஆண்டு களுக்கும் மேலாகியும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் காரணம் இவரின் வள்ளல் தன்மையும் பிறரை மதிக்கும் குணமுமே எனலாம்.
அதற்கு சான்றுதான் இந்த நிகழ்வு எனக் கூறலாம். அறிஞர் அண்ணா மரணம் அடைந்த சில நாட்களில் ஆன்மிக சொற்பொழிவாளரான கிருபானந்த வாரியார் அவர்கள் நெய்வேலி பகுதியில் நடைபெற்ற தொடர் சொற்பொழிவு கூட்டத்தில், ‘ஆண்டவனை நம்பாதவர்கள் அமெரிக்காவுக்கே போனாலும் டாக்டர் மில்லரே வந்தாலும் இப்படித்தான் முடிவு ஏற்படும்’ என்று பேசியதாக செய்திகள் கசிந்து அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயர் டாக்டர் மில்லர்.
என்பதால் அண்ணாவை இழிவுபடுத்திவிட்டதாகக்கூறி திமுக தொண்டர்கள் கிருபானந்த வாரியார் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பாக, எம்.ஜி.ஆர் தொண்டர்கள் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் எம்.ஜி.ஆருக்குத் தகவல்கள் வந்தன.
அத்துடன் வாரியார் தாக்கப்பட்ட செய்தி எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. அவரைச் சமாதானம் செய்யும் வகையில் ஏதேனும் செய்யவேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர். உடனே ம.பொ.சியைத் தொடர்புகொண்டு பேசினார். அவரின் ஆலோசனைப் படி எம்.ஜி.ஆர். வாரியாரை சமாதானப்படுத்த தம் சொந்தச் செலவில் ஒரு ஆன்மீக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததுடன் கிருபானந்த வாரியாரையும் அழைத்துப் பேச வைத்து, தானும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அந்த மேடையில் வாரியார் அவர்கள் எம், ஜி, ஆருக்கு அளித்த பட்டம்தான்‘ பொன்மனச் செம்மல்’ எம் ஜி ஆர் அவர்களின் 107 வது பிறந்த தினத்தில் இதனை நினைவு கூர்ந்து அவரது சாதனைகளைப் போற்றுவோம்.
தொகுப்பு: சேலம் சுபா