

உங்களுக்குத் தெரியுமா இன்று உலக இட்லி தினம் என்று?
நான் இன்று இந்தத் தினத்தைக் கொண்டாட காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்திருக்கிறேன். சுவாமி தரிசனம் முடிந்து, மிகவும் பிரசித்தி பெற்ற ‘காஞ்சிபுரம் இட்லியை’ குளக்கரையில் அமர்ந்து, மீன்களுக்குப் போட்டுக்கொண்டே நானும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.
காஞ்சிபுரம் இட்லியை ‘கிங் ஆஃப் இட்டிலி’ (King of Idli) என்றுதான் நாங்கள் அழைப்போம். அதன் சுவையும் மணமும் நம்மை எங்கோ கொண்டு சென்றுவிடும். அதற்குச் சட்னியோ, சாம்பாரோ அவசியமில்லை. வரதராஜ பெருமாள் கோவிலில் இந்த இட்லியை ‘கேக்’ கட் செய்வது போல வட்ட வட்டமாக நறுக்கித் தருகிறார்கள்.
தென்னிந்தியர்களான நாம் நம் தேசத்திலோ அல்லது உலகின் வேறு இடங்களுக்கோ செல்லும்போது, நம்முடன் எடுத்துச் செல்லும் ஒரு பாரம்பரிய விஷயம் இந்த இட்டிலி. ஒரு பிளேட் இட்டிலியைச் சாம்பார், சட்னியுடன் சேர்த்து உண்டால்தான் நமக்கு முழுமையான காலை உணவு சாப்பிட்ட உணர்வே வரும்.
இன்று எனது சில இட்டிலி அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:
மறக்க முடியாத பாட்டி இட்லி: நான் சிறுவனாக இருந்தபோது நானும் என் நண்பன் ராமகிருஷ்ணனும் வாடகை சைக்கிள் எடுத்துச் செம்பரம்பாக்கம் வரை சென்றோம். வழியில் ஒரு அரச மரத்தடியில் ஒரு பாட்டி அமர்ந்து இட்டிலி மற்றும் தோசை சுட்டுக் கொண்டிருந்தார். அன்று அந்தப் பாட்டி தந்த இட்டிலி போல இன்றுவரை நான் வேறெங்கும் சாப்பிட்டதில்லை. அந்த வாழை இலையையும், அந்தப் பஞ்சு போன்ற இட்டிலியையும், அந்தத் தேங்காய் சட்னியையும் என்னால் மறக்கவே முடியாது. "காசைப் பற்றிக் கவலைப்படாதீங்க, எவ்வளவு இட்டிலி வேணுமோ அவ்வளவு சாப்பிடுங்க கண்ணுங்களா!" என்ற பாட்டியின் குரல் இன்றும் என் காதில் ஒலிக்கிறது.
டெல்லி விமான நிலைய அனுபவம்: இன்னொரு அனுபவம் டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்டது. பயணிகள் தங்கும் ஹாலில் அமர்ந்திருந்தபோது பசி வயிற்றைக் கிள்ளவே, நான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த இட்டிலி பொட்டலத்தைத் திறந்து சாப்பிட ஆரம்பித்தேன். அது வாழை இலையில் கட்டப்பட்டு, மிளகாய்ப் பொடியில் பிரட்டி, நெய் சேர்த்த இட்டிலிகள். நான் சாப்பிடுவதைத் தூரத்திலிருந்து பார்த்த ஒரு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி என்னிடம் வந்து, "இது என்ன சமாச்சாரம்? எனக்கும் சாப்பிட வேண்டும் போல இருக்கிறதே!" என்று அழகான ஆங்கிலத்தில் கேட்டார்.
"ஒன்று சுவைத்துப்பார்க்கிறீர்களா?" என்று நான் பொட்டலத்தை நீட்டியதுதான் தாமதம், உடனே ஒரு இட்லியை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார். அப்போது அவர் முகத்தில் தோன்றிய பரவசத்தைப் பார்க்க வேண்டுமே! நான் கொண்டு சென்ற எட்டு இட்டிலிகளில் நான்கைச் சாப்பிட்ட பிறகுதான் அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். செல்வதற்கு முன் என்னிடம் ஒரு சாக்லேட் பார் கொடுத்துவிட்டுச் சென்றார்.
என்னைப் பொறுத்தவரை தென்னிந்தியர்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களில் இட்டிலியும் ஒன்று.
இட்டிலி இட்டிலி இட்டிலி... இட்டிலி இல்லையேல் பட்டினி பட்டினி பட்டினி!