’சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’!
ஆம். குட்டீஸ் முதல் தாத்தா பாட்டீஸ் வரை பலரையும் திரும்பி பார்க்க வைப்பவர் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருக்கே உரிய மிடுக்கும் ஸ்டைலும் அவரது 72 வயதிலும் நம்மை கட்டித்தான் போடுகிறது. படையப்பா ஸ்டைலில் சொல்லணூம்னா ‘வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்ன விட்டு இன்னும் போகல தலைவரே'!
தனது 163வது படமாக ’அண்ணாத்த’வில் தோன்றினார். அந்த படம் பெரும் அளவிற்கு வெற்றியை கொடுக்காவிட்டாலும், தனது அடுத்த படம் செம ஹிட் ஆகவேண்டும் என அன்றே கங்கனம் கட்டிவிட்டார் போலும். நாளை வெளிவர இருக்கும் ’ஜெயிலர்’ திரைப்படம் அந்த ‘செமஹிட்’ பாதையை நோக்கிச் செல்கிறது என்பதை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நெல்சன்:
டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தவர் நெல்சன். இவரின் இயக்கத்தில்தான் ரஜினி தனது 164வது படம் நடிக்கவுள்ளதாக கடந்த ஆண்டு அதிரடி அறிவிப்பு வெளியானது. ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க, அந்த படத்திற்கு ’ஜெயிலர்’ என்று பெயரும் சூட்டப்பட்டது. இந்த படத்தை ’சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்ற தகவல்களும் வெளிவந்தன. நெல்சன் என்றாலே காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். யோகிபாபு, ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்டோரும் இணைய, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது.
பான் இந்திய நடிகர்கள்:
ஜெயிலரில் ஜாக்கி ஷ்ராப், சிவராஜ்குமார், மோகன்லால் என பான் இந்திய நடிகர்கள் பலரும் இணைந்திருப்பது படத்திற்கான கூடுதல் பலமாக இருக்கிறது. எதிர்பார்ப்பையும் வேற லெவலுக்கு எடுத்துச்சென்றுவிட்டது.
சூப்பர் ஸ்டார் யாரு?:
கடந்த ஒரு வருட காலமாக பல போராட்டங்களை சந்தித்து வந்தது ஜெயிலர் படப்பிடிப்பு. படம் நிறைவடையும் நேரத்தில் ஆடியோ லாஞ்சு மற்றும் டிரைலர் வெளியீடுக்கு முன்பாகவே, அதிரடியாக கிளம்பியது சர்ச்சை. அடுத்து யார் சூப்பர் ஸ்டார் என்று.. ஒரு பக்கம் ரஜினிதான் எப்போதும் சூப்பர் ஸ்டார் என்று ரஜினி ரசிகர்கள் கூவ, விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என விஜய் ரசிகர்கள் குரலெழுப்ப தொடங்கினர். இந்த சர்ச்சை பூகம்பமாய் வெடிக்க தொடங்கியது. அஜித் Vs விஜய் என்ற போட்டி சற்று அமைதியுற்று, ரஜினி Vs விஜய் என்ற சர்ச்சை தொடங்கியது. பலமேடைகளில் இது குறித்து பேசப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட இந்த சப்ஜெக்டை தங்களது மேடை உரைகளில் நுழைத்தனர். ஜெயிலர் படத்திற்கு வந்த சோதனையா இது? என ரஜினிகாந்த் கூட வியந்திருக்கலாம்! அந்த அளவிற்கு வளர்ந்தது சர்ச்சை.
ஜெயிலர் ட்ரைலர் – ரம்யா கிருஷ்ணன் அப்டேட்:
படத்தின் ட்ரைலர் ரிலீஸானதும் ’நீலாம்பரி படையப்பாவை ஒரு வழியாகப் பழிவாங்கிவிட்டார்’ என கமெண்டுகளை அள்ளி தட்டினர் நெட்டிசன்கள். படையப்பா படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து, அதில் ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்துடன் சேர முடியாமல் இறந்து போய்விடுவார். அப்போது ’அடுத்த ஜென்மத்தில் உன்னை பழிவாங்குவேன்’ என்று க்ளைமாக்ஸ் காட்சியில் கூறுவார். இந்த காட்சியையும், ஜெயிலர் காட்சியையும் ஒப்பிட்டு பலரும் நீலாம்பரி பழிதீர்த்து கொண்டதாக பதிவிட்டனர்.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ரம்யா கிருஷ்ணன், ஜெயிலர் திரைப்படம் காமெடி, சீரியஸ் என இரண்டுமே கலந்தது என்றும், காமெடி ஜானரில் நடித்தது தனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதிரடி கிளப்பிய ஆடியோ லாஞ்சு:
இங்கேயும் ரஜினி - விஜய் சர்ச்சை அவதாரம் எடுத்தது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே விஜய் பாடல் ஒலிக்கப்பட்டதால் சர்ச்சையானது. ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து எழுந்தனர். சமூக வலைதளங்களில் தங்களின் எதிர்ப்பை உடனுக்குடன் பதிவிட்டனர்.
கழுகு Vs காகம்:
மேடை ஏறிய ரஜினிகாந்த் தனக்கே உரிய ஸ்டைலில் ரசிகர்களுக்காக ஒரு குட்டி ஸ்டோரி சொன்னார். காக்கா கழுகு கதை வைரலானது. கழுகு பறந்து கொண்டிருக்கும் போது, காகம் சும்மா இல்லாமல் வந்து வந்து கழுகைக் கொத்திச் செல்ல முற்படுமாம். ஆனால் கழுகு அதை பொருட்படுத்தாமல் மேலே மேலே பறந்து உயரத்துக்கு செல்லுமாம். இதுதான் அந்த கதை!.
ரஜினிகாந்த் விஜய்யை தான் காக்கா என குறிப்பிடுவதாகக் கூறி விஜய் ரசிகர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவிக்க, ரசிகர்களின் வாதம் விஸ்வரூபம் எடுத்து, ரஜினி - விஜய் ஆன்லைன் கலவரம் ஏற்பட்டது.
‘காவாலா’ கவர்ச்சி:
சண்டை ஒரு பக்கம் ஓடினாலும் படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்றது. படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடல் உலகம் முழுவதும் கலக்கி களைகட்டி ட்ரெண்டாகி வேற லெவலுக்கு போய்விட்டது!
நடிகை தமன்னா தனது மாஸ் டான்ஸ் ஸ்டெப்களால் ரசிகர்களை கட்டி போட்டுள்ளார். வா நு காவலயா ரிங்டோன் பல கோடி போன்களில் இன்று ஒலித்து வருகிறது! பட்டி தொட்டி எல்லாம் இப்பாடல்தான்!
ஹூக்கும் டைகர்கா ஹூக்கும்:
தலைவர் ரஜினிகாந்த் எண்ட்ரி சாங் போலும்(??). செம தூள் வரிகள்! வேற லெவல் மியூசிக்! அச்சு அசல் அப்படியே தலைவருக்குப் பொருந்தும் கலக்கல் பாடல் என்று அத்தனை ஒட்டுமொத்த ரசிகர்களாலும் பாராட்டப்படும் பாடல். மெகா ஹிட்! உன் அலும்ப பாத்தவன், உங்க அப்பன் விசில கேட்டவன் என பாடலாசிரியர் சூப்பர் சுப்பு, பாடல் வரிகளைப் புனைய, அது ரஜினியின் மனசை உறுக்கிவிட்டதாம். இசையமைத்து இசைத்தும் இருக்கிறார் அனிருத். அட்டகாசமான வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலைக் காண, நாளையும், அதைத் தொடர்ந்தும் கோடானுகோடி கண்கள் காத்திருக்கின்றன தலைவா!
கண்கலங்கிய சூப்பர் சுப்பு:
பேட்டி ஒன்றில் பேசிய சூப்பர் சுப்பு, தனக்கு ரஜினிகாந்த் அனுப்பிய வாய்ஸ் மெசெஜை கேட்டு கண்கலங்கியதாக தெரிவித்துள்ளார். வரிகள் எல்லாம் சூப்பர் என ரஜினிகாந்தே தெரிவித்ததால் இதை விட தனக்கு வேறு என்ன வேண்டும் என மனம் நெகிழ்ந்துள்ளார். சுப்பு, இளம் வயது முதலே ரஜினியின் தீவிர ரசிகர். கல்கி ஆன்லைன் You Tube Channel க்கு அவர் அளித்த பேட்டி இதோ
கலாநிதி மாறன்:
’’என் தாத்தா ரஜினியை ரசித்தார். நான் ரசிக்கிறேன், எனது மகள் ரசிக்கிறார். எனது பேரனும் பேத்தியும் ரசிப்பார்கள். தலைமுறைகள் தாண்டி ரசிகர்கள் கொண்டவர்தான் நம் சூப்பர் ஸ்டார். இதை சூப்பர் சுப்பு தன் பாடலில் எழுதிவிட்டார். ரஜினி சாருக்கு போட்டியே இல்லையா என்றால் இருக்கிறார். விஜய் சொன்னது மாதிரி ரஜினிக்கு ரஜினியேதான் போட்டி" என்று தனது உரையில் விஜய் பெயரை இழுத்து விட்டார் தயாரிப்பாளர். என்ன, மேற்கூறியபடி அவர் பேசிக்கொண்டு இருக்கும்போது, ’விஜய் சொன்னது மாதிரி’ என்று கூறுவதற்கு முன்பாக, ரஜினிக்கு போட்டியே இல்லையா என்றால் இருக்கிறார், 'சகோதரர் தளபதி விஜய்' என சொல்லி சின்ன கேப் விட்டார். அதனை கேட்ட பலரும் ரஜினிக்கு போட்டி விஜய்தான் என கலாநிதி சொல்லவருகிறார் போலும் என நினைக்கும்போது சகோதரர் தளபதி விஜய் சொன்னது மாதிரி' என அலேக்காக மாற்றி அனைவரையும் மகிழ்வித்தார்.
மம்முட்டிக்கு முடியாமல் போனது:
நடிகர் ரஜினிகாந்தின் உயிர் நண்பனான மம்முட்டிதான் ஜெயிலர் படத்தில் முதலில் நடிக்கவிருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால் மம்முட்டி இதில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. 31 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இப்படத்தில் இணைய இருந்து கடைசி நேரத்தில் முடியாமல் போனது பலருக்கும் ஏமாற்றம்தான். அந்த கதாபாத்திரத்தில் நம் உள்ளூர் வில்லனான விநாயகன் நடித்துள்ளார்.
ஜெயிலர் படம் ஓடுமா? நாடி ஜோதிடர் பாபு கணிப்பு:
ஜெயிலர் படம் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நாடி ஜோதிடர் பாபு, படத்தின் முதல் பாதி நன்றாக இருக்கும் என்றும், படத்தின் 2ஆம் பாதி அட்டகாசமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயிலர் படம் வெற்றிப்படமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். ஜோதிடர்களும் ஜெயிலர் படத்தைக் குறித்து ஃபாலோ செய்து வருவது சுவாரஸ்யமான விஷயமாக உள்ளது!
ஜெயிலர் படம் காப்பியா?:
இதெல்லாம் போக, இன்று பல படங்களுக்கும் ஏற்பட்டு வரும் பிரச்னை ஜெயிலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஜெயிலர் திரைப்படம் ஹாலிவுட் படமான 'nobody'என்ற படத்தின் காப்பி என்று கூறப்படுகிறது. ஓய்வு பெற்ற அதிகாரியான நபர் தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், அவரின் முந்தைய ஃப்ளாஷ் பேக் தான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தடையாக இருப்பதாகவும் கதை அமைந்துள்ளதாகத் தெரிகிறது. என்ன இருந்தாலும் நாளை படம் வெளியான பிறகு தான் கூடுதல் விவரங்கள் தெரியும்.
நாளை:
‘’ஒரு வாரத்திற்கு தியேட்டர் பக்கமே வராதீங்க. அனைத்து காட்சிகளும் house full’’ என்று திரையரங்குகாரர்கள் கூறிவிட்டனர். பல நூறு கோடி வசூல் நிச்சயம். கமலின் விக்ரம் பட வசூலையும், மணிரத்னத்தின் பொ. செ. படத்தின் வசூலையும், ஜெயிலர் தாண்டும் என்றும் பலர் கூறிவருகின்றனர். தமிழ்நாட்டில் டிக்கெட் கிடைக்காது என்று மக்கள் பெங்களூருவுக்குத் திரளாகச் செல்கின்றனர். பிரம்மாண்ட கட் அவுட்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
நாளை ஜெயிலர் படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ரஜினிகாந்த் இமயமலை செல்கிறார். இதனை அறிந்த ரசிகர்கள் பார்த்து போயிட்டு வாங்க தலைவா என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எது எப்படியோ… ஜெயிலர் ஜெயிக்கணும்! ஜெயிக்கும்!