இலங்கையில் பொருளாதார நெருக்கடி: அதிபர் இல்லம் முன்பு மக்கள் போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: அதிபர் இல்லம் முன்பு மக்கள் போராட்டம்!

Published on

உலகெங்கும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், சுற்றுலாத்துறையை பெருமளவு சார்ந்துள்ள இலங்கையிலும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக  உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் தினமும் 10 மணிநேர மின்வெட்டு அமல்படுத்தப் பட்டுள்ளது. அந்நாட்டு விலைவாசியும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டு மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகவும் அதிபருக்கு எதிராகவும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே  இல்லம் அமைந்துள்ள நுகேகொட மிரிஹான அருகே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அதிபருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபர் இல்லத்திற்கு செல்லும் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் விரட்டினர்.அதனால் போலீசார் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்கியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

அதிபர் இல்லம் முன்பாக பொதுமக்கள் நடத்திய இந்த போராட்டத்தைத் தொடர்ந்து, கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் நுகேகொட போலீஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com