திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப் படுவதாக, அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.
-இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுபாடுகள் காரணமாக திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் கடந்த மாதம் முதல் பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பௌர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். அந்த வகையில் இம்மாதம்15-ம் தேதி மற்றும் 16-ம் தேதியில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிவலத்துக்கு வரும் மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். மேலும் அண்ணாமலையார் கோவில் மற்றும் அதன் கிரிவல பாதையை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது நமது பொறுப்பு ஆகும்.
இந்த சித்ரா பவுர்ணமியன்று 40 இடங்களில் திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அப்படி அன்னதானம் வழங்க விரும்புவோர் https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் மூலம், முன்பதிவு செய்து அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்படாத இடங்களில் அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
-இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.