தமிழகச் சட்டப் பேரவை: துபாஷ் பதவிக்கு முதன்முறையாக பெண் நியமனம்!

தமிழகச் சட்டப் பேரவை: துபாஷ் பதவிக்கு முதன்முறையாக பெண் நியமனம்!

தமிழக சட்டமன்றத்தின் வரலாற்றில் முதன்முறையாக  துபாஷ் பதவிக்கு ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் துபாஷ் என்ற பதவியை இதுவரை ஆண்களே வகித்துள்ள நிலையில், முதன்முறையாக ராஜலட்சுமி என்ற பெண் இப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். துபாஷ் பதவிக்குரிய பிரத்தியேக சீருடை அணிந்து, சட்டமன்ற வளாகத்தில் சபாநாயகருக்கு முன்பாக செல்வது இவரது பணியாகும். சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பதும், மீண்டும் சபாநாயகர் தனது அறைக்குச் செல்லும்போது உடன் செல்வதும் துபாஷின் கடமையாகும்.

அதாவது துபாஷ் என்பவர் சபாநாயகரின் வருகைக்கு முன்னதாக கட்டியம் கூறும் வகையில் முன்சென்று சபாநாயகர் பின்னால் வருவதை உறுதி செய்யும் நபராக கருதப்படுகிறார். ஆங்கிலேயர் காலத்திலிருந்து இந்த துபாஷ் பதவி இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது தமிழக சட்டமன்றத்தில் துபாஷாக நியமிக்கப் பட்டுள்ள ராஜலட்சுமி, 1990 ஆம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தவர். தற்போது 60 வயதாகும் ராஜலட்சுமி வருகிற மே மாதம் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com