மகாராஷ்டிராவில் பல எம்.எல்.ஏ-க்கள் ஆளும் சிவசேனா கட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றதால், அங்கு உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த எம்எல்ஏ–க்கள் மீது ஜூலை 11-ம் தேதி வரை நடவடிக்கை எடுக்க கூடாது உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதை ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனுவில் குறிப்பிட்டதாவது:
மகாராஷ்டிரா எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது தொடர்பான நோட்டீஸ் சட்ட விரோதமானது. மேலும் அம்மாநிலத்தில் 38 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால் மகா விகாஸ் அகாதி கூட்டணி பெரும்பான்மையை இழந்து விட்டது.
-இவ்வாறு தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 16 பேர் மீதான தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக, துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் உரிய பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.
மேலும், அதிருப்தி எம்எல்ஏ–க்கள் உரிய விளக்கம் அளிக்க, ஜூலை 11-ம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும்அதுவரை, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.அத்துடன், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் தங்களது அரசை யாரும் வீழ்த்த முடியாது என்று ஆதித்ய தாக்கரே நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பணமோசடி வழக்கு தொடர்பாக சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.