தமிழக ரேஷன் கடைகளில் கைரேகைக்குப் பதிலாக கருவிழி பதிவு அடிப்படையில் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் அரிசி மூட்டைகள் மழையால் சேதம் அடையாமல் பாதுகாக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். ரேஷன்கடைகளில் அரிசி கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் அவ்வப்போது கோளாறு ஏற்படுகிறது.அதனால் அக்கருவிகலில் கைரேகைப் பதிவுகள் பயன்படுத்த முடிவதில்லை. அதனால், மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் கருவிழி மூலம் பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
அந்த வகையில் விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழிப் பதிவின் அடிப்படையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். மேலும் மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள் ஆகியோருக்குப் பதிலாக அவர்கள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு ரேஷன் பொருள் வாங்க அனுமதிக்கப்படுவர்.
-இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.