மாநகரப் பேருந்துகளின் மகா அவலம்!

பஸ்ஸுக்குள் குடை
பஸ்ஸுக்குள் குடை

மிழக முதல்வர் அவர்கள் தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம்’ என்பதும் ஒன்று. அதன்படி வெற்றி பெற்றதும் அந்த வாக்குறுதியில் சில மாற்றங்களோடு, ‘வெள்ளை போர்டு பேருந்துகளில் மட்டும் பெண்களுக்கு இலவசப் பயணம்’ என்று அறிவித்தார். பெண்களுக்கான அந்த சலுகையையும் ஒரு தமிழக அமைச்சர், ‘ஓசி பயணம்’ என்று கூறி கிண்டலடித்து, பின்பு மன்னிப்பு கேட்டுக்கொண்டதையும் நாம் அறிவோம். ஆனால், இந்த இலவசப் பேருந்து பயணத்தை பல பெண்களே விரும்பவில்லை என்பதுதான் நிதர்சனம்.

விஷயம் இப்போது அதுவல்ல, இன்று பெய்த ஒரு நாள் மழைக்கே அரசு பேருந்துகளில் நிலை எப்படி இருகிறது என்பதுதான். சென்னை மாநகர அரசு பேருந்துகளில் இருவர் அமரக்கூடிய இருக்கைகள் இருக்கிறது, ஆனால் அதில் ஒருவர்கூட உட்கார முடியாது என்பதுதான் இன்றைய நிலைமை. காரணம், பேருந்துகளில் உடைபெடுத்து ஓடும் மழை நீர்தான். பேருந்துகளில் ஒழுகாமல் இருக்க அதன் மேல் பகுதியில் தார் ஷீட் போன்றவற்றை ஒட்டி வைத்திருப்பார்கள். அது குறிப்பிட்ட ஒரு காலம் வரைதான் நன்றாக இருக்கும். அதை அரசுப் போக்குவரத்துத் துறை பராமரிப்பு பிரிவில் உள்ளவர்கள் குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு ஒருமுறை பரிசோதித்து சரிசெய்து தர வேண்டியது அவர்களின் பொறுப்பு. ஆனால், அதை அவர்கள் சரியாகப் பராமரிக்கிறார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

அமர முடியாத இருக்கை
அமர முடியாத இருக்கை

இன்றைக்கு சென்னையில் பயன்பாட்டில் இருக்கக்கூடிய அரசு மாநகரப் பேருந்துகளில் ஒருசில பேருந்துகளைத் தவிர்த்து, அனைத்துப் பேருந்துகளும் நெண்டியும் தொண்டியுமாகத்தான் இருக்கின்றன. அதற்கு உதாரணம்தான் நீங்கள் படத்தில் பார்க்கும் இந்தப் பேருந்து. இது, சென்னை வடபழனியில் இருந்து பெசண்ட் நகர் வரைக்கும் செல்லும் 5இ பேருந்து. இந்த பேருந்தில் ஒரு இருக்கையின் மேல் கூட ஒழுகாமல் இல்லை. இந்தப் பேருந்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் முதியவர்கள் என்று பலரும், இருக்கைகள் இருந்தும் நின்று கொண்டே பயணம் செய்தது வேதனையான விஷயம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பணிக்குச் செல்லும் ஒரு பெண் பேருந்துக்குள்ளேயே குடை பிடித்துச் சென்றதுதான். ‘இந்த மாதிரி ஓட்டை பஸ்ஸை விட்டுட்டு, எங்களுக்கு இலவச பேருந்து பயணம் வேண்டும் என்று யார் இவர்களிடம் கேட்டது?’ என்று பல பெண்கள் முணுமுணுத்தது நமது காதில் விழுந்தது. இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவித்த அரசு, அந்தப் பேருந்துகளில் உள்ள குறைபாட்டை போக்க மறந்தது ஏன் என்பது பொதுமக்கள் அனைவரின் கேள்வியாக உள்ளது. கவனித்து நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com