சென்னை மெரினா கடற்கரைக்கு இன்று பொதுமக்கள் செல்ல காவல்துறை தடைவிதித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் தெரிவித்ததாவது:
தமிழக கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த கல்லூரி தேர்வுத்துறை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்ததால் தேர்வும் ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மெரினாவில் ஒன்று கூடப் போவதாக சமூக வலைதளங்களில் சிலர் கூறிவருகின்றனர்.
இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சமூக வலைத்தளங்களில் இதுபோன்று வதந்திகளை பரப்புவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட இதர சட்டப்பிரிவுகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையொட்டி மெரினா கடற்கரையில் மயிலாப்பூர் துணை கமிஷனர் தீஷா மிட்டல் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் தேர்வு நடத்த வலியுறுத்தி மாணவர்கள் மெரினாவில் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவலால், சென்னை மெரினா கடற்கரைக்கு இன்று பொதுமக்கள் செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது. மேலும் மெரினா கடற்கரையில் உள்ள சர்வீஸ் சாலையில் வாகன போக்குவரத்துக்கு இன்று அனுமதி இல்லை.
–இவ்வாறு கூறப்பட்டுள்ளது.