பகல் நிலவு முதல் பொன்னியின் செல்வன் வரை ....!

Happy Birthday Director Manirathnam...!
MANIRATHNAM
MANIRATHNAM

பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய நவீன பாணி கதைகளை சொல்லும் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது பலரது கனவுப் படமான பொன்னியின் செல்வன் கதையை நமது கண் முன் பிரமாண்டமான திரைப்படமாக காட்டிய இயக்குநர் மணிரத்னம் இன்று தனது 67வது பிறந்தநாளை ஆர்ப்பாட்டமில்லாமல் கொண்டாடி மகிழ்கிறார்.

தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர் வரிசையில் முக்கிய இடத்தை பிடித்தவர் இயக்குனர் மணிரத்தினம் . காதல் படங்களை பிரம்மாண்ட திரையில் கவிதையாய் காவியமாய் திரைக்கதைகளில் கையாள்வதில் கைதேர்ந்த இயக்குநர் மணிரத்னம். அதற்கு பொன்னியில் செல்வனில் வரும் நந்தினி, ஆதித்த கரிகாலன் காதல் காட்சிகளே பெரும் சாட்சி.

இவரது பகல் நிலவு, இதயக் கோயில், மெளன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், உயிரே, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டாள், ஆயுத எழுத்து, குரு, ராவனன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 என இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அத்தனை படங்களுமே தமிழ் திரையுலகில் அழகிய தடம் பதித்தவை. இவரும் இளையராஜாவும் இணைந்த மௌனராகமும் அக்னி நட்சத்திர பாடல்களும் ஒரு அற்புத இசை மேஜிக்.

ஒவ்வொரு படத்திலும் தன் முழு திறமையைக் காட்டி, இந்திய சினிமாவை சர்வதேச தரத்திற்கு உருவாக்குவதில் மணிரத்னம் வல்லவர். அதிக அளவு உரையாடல்களை தவிர்த்து கேமரா கோணங்களிலேயே காட்சிகளை நகர்த்துவதில் வல்லவர். இவரது படங்கள் அபரிமிதமாக ஒளி வெள்ளத்தினை வாரி உமிழாமல், இயற்கை வெளிச்சத்தில் யதார்த்தமாக இருப்பதே இவரது பாணி.

சூப்பர் ஸ்டாருக்கு இவர் தளபதி. கமலுக்கு நாயகன். விக்ரமிற்கு ஒரு இராவணன். அக்காலகட்டத்தில் மௌனராகம் பட மோகனை போன்ற கணவரும் , கார்த்திக் போன்ற காதலரும் வேண்டும் என வேண்டாத பெண்கள் தான் உண்டா...?

இவர் ரஹ்மானுடன் இணைந்த ரோஜா முதல் பொன்னியின் செல்வன் வரை ரசிகர்களை மயக்கம் கொள்ள வைத்த இசை அதிரடிகள். இவர் அதிகம் பேசமாட்டார் . ஆனால் இவரது படங்களோ காலம் முழுவதும் அனைவரையும் பேசவைக்கும் . இவரது படங்களில் ஒரு முறையேனும், ஒரு சில கட்சிகளிலேனும் தலையை காட்டி விடத் துடிக்கும் நட்சத்திர பட்டாளங்கள் ஏராளம்.

எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் திரையுலகை சேர்ந்த பல ஜாம்பவான்கள் திரைப்படமாக்க கனவு கண்ட பொன்னியின் செல்வன் கதை திரைப்படமாக உருவாக்கி அதனை பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே வெற்றிகரமான திரைப்படமாக்கி சாதித்து காட்டியுள்ளார். இனி வரும் காலங்களில் தமிழில் வரலாற்று படங்கள் எடுக்க நிறைய பேர் வரலாம். அதற்கு முன்மொழிந்தும் , வழிமொழிந்தும் இருப்பவர் மணிரத்தினமே.

ஆறு முறை தேசிய விருது, ஆறு முறை பிலிம்பேர் விருது என பல விருதுகளை அள்ளிய இவர், இந்திய சினிமாவின் அடையாளமாகவும், சினிமாவில் சாதிக்க நினைப்பவர்களின் இன்ஸ்பிரேஷனாகவே இருந்து வருகிறார் என்றால் அது மிகையில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com