பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விசாரணை நடத்திய டி.எஸ்.பி ஜெயராமனின் திண்டுக்கல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம் பெண்களை சில இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து பணம் பறித்ததாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு பெண் புகாரளித்தார். இதனையடுத்து சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மணிவண்ணன் என்பவரும் சரணடைந்தார். இவர்கள் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த பாலியல் வழக்கு சிபிஐ–க்கு மாற்றப்படும் முன்னர் விசாரணை அதிகாரியாக இருந்த டிஎஸ்பி ஜெயராமன், இப்போது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் டிஎஸ்பி ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று கலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.