கார்த்திகை மாதம் தொடங்கி , 'சுவாமியே ஸரணம் ஐயப்பா' என்ற கோஷம் எங்கும் ஒலிக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள், கருப்பு ஆடை அணிந்து, 47நாட்கள் விரதமிருந்து, இருமுடிகட்டி, சபரிமலை நாதனை தரிசிக்க செல்வார்கள். தென் மாநிலங்கள் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலுமிருந்தும், பக்தர்கள் சபரி மலையில் குவிவார்கள்.
ஐயப்ப பக்ததர்கள், பெருவழிப்பாதை எனப்படும் எரிமேலி வனப்பகுதி வழியே பாத யாத்திரையாய் வருவார்கள். இந்தவழி, பேரூர் தோடு, காளைகட்டி, அழுதை, அழுதை நதி, கல்லிடுங்குன்று, இஞ்சிப் பாறை, உடும்பாறை, முக்குழி, கரிவலம்தோடு, கரிமலை, பெரிய, சிறிய யானை வட்டம் என்ற இடங்கள் வழியே வருகிறது. இந்த வழியே பக்தர்கள் பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் வருவார்கள். இதுமட்டுமல்லாது, கோட்டயம், செங்கணூர் மற்றும் எர்ணாகுளம் போன்ற இடங்களிலிருந்தும், பக்தர்கள் வருவார்கள்.
இவர்களனைவரும் பம்பா நதிக்கரையில் குவிவார்கள். களைப்புத்தீர பம்பை நதியில் புனித நீராடி 5 மைல் தூரத்தில் உள்ள சபரிமலை சன்னிதானத்திற்கு பயணிப்பார்கள். இந்தப் பம்பா நதி, மேற்குத் தொடர்ச்சி மலை, புளிச்ச மலையில் தொடங்கி, பத்தினம்திட்டா, ஆழப்புழா வழியே வேம்பநாட்டு ஏரியை அடைகிறது.
ஒவ்வொரு முறையும் பக்தர்கள் வரும் காலங்களில், கேரள அரசு, பம்பா நதி நீரின் தரத்தைப் பரிசோதிக்கும். அப்படி தற்போது பரிசோதித்த போது, 'கோலி பார்ம்', என்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 500 என்ற அளவில் இருந்தாலே, பம்பா நதியில் குளிக்கக் கூடாது. ஆனால் இப்போது 6000 எனும் அளவில், கோலி பாரம், பாக்டீரியாக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது ஆபத்தானது.
இந்த பாக்டீரியா உள்ள நீரில் குளித்தால், 'மலேரியா', 'டைஃபாய்டு', 'வயிற்றுப் போக்கு', வாந்தி', போன்ற வியாதிகள் வரக்கூடும். இதனால் மேலே சன்னிதானம் நோக்கி யாத்திரையைத் தொடர முடியாமல் போகும்.
இதற்குக்காரணம், நீரில் கலக்கும் ரசாயனம் ஆகும். பக்தர்கள் உபயோகப் படுத்தும் சோப்பு, ஷாம்பூ போன்றவைகளில் பம்பா நீரில் கலந்து விடுவதாலும்,ஆடைகளை ஆற்று நீர் வீசி விட்டுச் செல்வதாலும், இந்த ரசாயனம் உருவாகிறது. வரும் 20 தேதி வரை பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்பதால், கிருமிகளை விலக்க, 'குள்ளர் அணை'யிலிருந்து நீர் திறந்து விடப்படுகிறது. மேலும் ஐயப்ப பக்தர்கள், நதி நீரில் துணிகளை எறிய வேண்டாம் என, கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. என்றபோதும், பக்தர்கள், அனைவரின் நலன் கருதி, பொறுப்போடு நடந்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய நாட்களில் கூட்டம் அதிகம் வருவதால், தரிசன நேரம் ஒருமணி நேரம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஐயப்பப் பக்தர்கள், சுமார் 8-10 மணிஜநேரம் காத்திருந்துதான், சபரி மலை வாசன், ஐயப்ப பகவானைத் தரிசிக்க முடிகிறது. எனவே பக்தர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில், பம்பா நதி நீரில் உள்ள பாக்டீரியாக்களின் அளவை, கேரள அரசு, கண்காணித்துக் கொண்டு வருகிறது.
வரும் 20ந்தேதி, 'பந்தள' ராஜ குடும்பத்தினர் வந்து, ஐயப்பனைத் தரிசித்து சென்றதும் நடை அடைக்கப்படும்.
அதுவரை வரும் பக்தர்களை, எந்தவித துன்பத்திற்கும் ஆளாக்காமல், பந்தளமக ராஜன், சபரிமலை வாசன், ஐயப்ப சுவாமி, அருள் புரிவானாக...!