இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியாகவுள்ள '.பொன்னியின் செல்வன்' படத்தில் 'பொன்னி நதி' என்ற பிரபல பாடலைப் பாடியுள்ள பாடகர் பம்பா பாக்யா காலமானார்.
கடந்த 2018 -ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் 2.0 படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் என்ற பிரபல பாடலைப் பாடியவர் பம்பா பாக்யா. அதே போல சர்க்கார் படத்தில் இடம்பெற்ற சிமிட்டங்காரன், பிகில் படத்தில் காலமே காலமே, சர்வம் தாளமயம், இரவின் நிழல், பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னி நதி ஆகிய பல பாடல்களைப் பம்பா பாக்யா பாடியுள்ளார்.
இந்நிலையில் நேற்று ( செப்டம்பர் – 1 ) திடீர் மூச்சுத் காரணமாக பம்பா பாக்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை பாடியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. 49 வயதாகும் இவர் தெலுங்கு, கன்னடம் மொழிப் படங்களில் பாடியுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற பம்பா எனும் இசைக் கலைஞரைப்போல் இவரின் இசை ஞானம் இருப்பதால் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இவருக்குப் பம்பா எனப் பெயர் வைத்தார். பாம்பா பாக்யா வரும் ஆண்டுகளில் பல படங்களில் பாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரின் மறைவு அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடகர் பம்பா பாக்யா மறைவுக்குத் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.