மதுரை, முக்கு நெல்மணி தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி நேற்று பாஜக மீனவர் அணி துணைத் தலைவராக பொறுப்பேற்றார் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சொல்லப்படும் நிலையில், நேற்று அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சிலர் வந்தனர். முத்துப்ப்பாண்டி அப்போது வீட்டில் இல்லாததால் அந்த கும்பல், வீட்டின்முன் நிறுத்தப்பட்டிருந்த காரை அடித்து நொறுக்கியது.
முத்துப்பாண்டி அருகில் உள்ள டீக்கடையில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற அந்த வன்முறை கும்பல், முத்துப்பாண்டியை சுற்றிவளைத்து ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. முத்துப்பாண்டி அங்கிருந்து தப்பி ஓட முயல, துரத்திய கும்பல், அவரை சரமாரியாக வெட்டியது. இதில், முத்துப்பாண்டி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அவர் உயிரிழந்து விட்டதாக எண்ணி அந்த கும்பல் அங்கிருந்து தலைமறைவானது.
அருகில் இருந்தவர்கள் முத்துப்பாண்டியை மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்கள், கொலைக்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் சமாதானம் ஆயினர். முத்துப்பாண்டியின் உடல் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முத்துப்பாண்டியை கொலை செய்த கும்பல் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் பாஜக மற்றும் அந்த கட்சியின் மாநில தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
(முத்துப்பாண்டி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாஜக மீனவர் அணி துணைத் தலைவர்.)