
உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று ஆமதாபாதில், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தென்னாப்பிரிக்க அணியுடன் மோதுகிறது ஆப்கானிஸ்தான்.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே இந்தியாவுடன் நடைபெற்ற போட்டியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த அக். 5 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனினும் இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றது. தற்போது 12 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதிபெற்ற இரண்டாவது அணியாக உள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியில் கேப்டன் டெம்பா பவுமா தவிர முதன்மை இடத்தில் உள்ள 6 ஆட்டக்காரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தி ஆடியுள்ளனர். தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டீ காக் 8 போட்டிகளில் 550 ரன்கள் எடுத்துள்ளார். நெதர்லாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் மட்டும் தென்னாப்பிரிக்கா தோல்வியைத் தழுவியது. இரண்டாவதாக களம் இறங்கி ரன்களை துரத்திச் சென்று வெற்றிபெறுவதில் அவர்கள் போராட வேண்டியுள்ளது.
ஆல்ரவுண்டர் மார்கோ ஜான்சென், ரபாடா, ஜெரால்டு கோட்ஸீ, லுங்கி நகிடி ஆகியோர் சிறந்த பந்துவீச்சாளர்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் மகாராஜ், ஷம்ஸியையும் குறைத்து மதிப்பிட முடியாது.
இதனிடையே ஆப்கானிஸ்தான் எப்படியாவது அரையிறுதியை எட்டிவிட வேண்டும் என்கிற கனவில் உள்ளது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை ஏறக்குறைய 200 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
கிளென் மாக்ஸ்வெல் தனியொருவனாக இரட்டை சதம் அடித்தது மறக்க முடியாதது. ஆப்கன் தொடக்க ஆட்டக்காரர் முதல் முறையாக சதம் அடித்ததையும் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.
ஆப்கானிஸ்தான் அணியிலும் ரஷீத்கான், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி, நபி உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்கலும், அஸ்மதுல்லா ஓமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். எனினும் பேட்ஸ்மென்கள் உறுதியாக நின்று ஆடினால் அதிக ஸ்கோரை எட்ட முடியும்.
தற்போது ஆப்கானிஸ்தான் 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அரையிறுதியை எட்ட வேண்டுமானால் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மட்டும் போதாது, ரன் விகிதத்தையும் அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. ஏனெனில் நியூஸிலாந்து , பாகிஸ்தான் அணிகள் அதிக ரன் ரேட் விகிதத்தில் முன்னிலையில் உள்ளன.
தென்னாப்பிரிக்கா அணி ஏற்கெனவே அரையிறுதியை உறுதி செய்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தானின் அரையிறுதிக் கனவு பலிக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.