இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்காதது குறித்து விளக்கம் அளித்த தென்னாப்பிரிக்கா வீரரும் விராட்டின் நண்பருமான ஏபிடி, தான் கூறியது தவறு என்று ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர்களில் இரண்டு போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்தன. இந்த இரண்டு போட்டிகளிலுமே விராட் கோலி பங்கேற்கவில்லை. அதனால்தான் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது எனப் பலரும் கருத்து தெரிவித்தனர்.
அதன்பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் அதை அனைவருமே சுத்தமாக மறந்துவிட்டனர். இதற்கிடையில் விராட் கோலி அடுத்த டெஸ்ட் போட்டிகளிலும் பங்குகொள்ள மாட்டார் என்ற செய்திகள் வெளியானது. இதுகுறித்து கோலி பிசிசிஐ-யிடம் இன்னும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் பங்குகொள்ளவில்லை என்று கூறும்போதே அதற்கு காரணம் தனிப்பட்ட விஷயம் என்றும், குடும்பத்துடன் நேரம் கழிக்கப் போவதாகவும் கூறினார். ஆனால் அப்போதும் விராட் கோலி ஏன் டெஸ்ட் போட்டிகளில் கலந்துக் கொள்ளவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் தென்னாப்பிரிக்கா கேப்டன் மற்றும் விராட் கோலியின் நண்பருமான ஏ.பி டிவில்லியர்ஸ் ஒரு வாரத்திற்கு முன் விராட் கோலி குறித்து வாய்த் திறந்தார். அதாவது ‘’விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் கலந்துக் கொள்ளாததற்கு காரணம் அவர் இரண்டாவது குழந்தையை வரவேற்கவுள்ளார். இந்த நேரத்தில் அவர் குடும்பத்துடன்தான் இருக்க வேண்டும். இதுதான் சரியான முடிவு’’ என்று கூறினார்.
இதனால் விராட்டின் ரசிகர்கள் இது உண்மை என்று நினைத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் வேகமாக ஷேர் செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று ஏபிடி மீண்டும் விராட் பற்றி பேசினார். ‘’நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். விராட் பற்றிக் கூறிய எதுவும் உண்மையல்ல. அவர் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை. காரணம் எதுவாக இருந்தாலும் அவர் அதிலிருந்து புத்துணர்வுடன் திரும்புவார் என்று நம்புகிறேன்’’ இவ்வாறு அவர் கூறினார்.