

தேசிய அணியில் இடம் பிடிக்கும் முன்னரே தனது அதிரடி ஆட்டத்தினால் சர்வதேச புகழ் பெற்றவர் வைபவ் சூரியவன்ஷி. அவருக்கு போட்டியாக மகளிர் கிரிக்கெட்டில் ஒரு புதிய முகம் அறிமுகமாகியுள்ளார். பிஹார் மாநிலத்தை சேர்ந்த இளம் வீராங்கனை அக்சரா குப்தா தான் அவர்.
15 வயது நிரம்பிய அக்சரா உள்ளூர் போட்டிகளில் அதிரடியான தனது ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். உள்ளூர் போட்டிகளில் பலமுறை தனது திறமையின் மூலம் பெரிய அளவில் ரன்களை குவித்து தனது அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறார். பல போட்டிகளில் இவரை வெளியேற்றுவதற்கு பவுலர்கள் படும்பாடு மிகவும் திண்டாட்டம் தான்.
பீகார் கிரிக்கெட் சங்கம் (BCA) சார்பில் நடத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று பகல்பூரில் தொடங்கியது. இந்த போட்டியில் களம் இறங்கிய அக்சரா குப்தா எதிரணியின் பந்துவீச்சைகளை நொறுக்கி எடுத்தார். இவர் ஆடிய ஆட்டத்தினை கண்டு இந்திய மகளிர் அணிக்கு ஒரு சிறப்பான பேட்ஸ் உமன் விரைவில் கிடைக்க உள்ளார், என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பேச தொடங்கியுள்ளனர்.
நேற்றைய ஒரு நாள் போட்டியில் நங்கூரம் பாய்ச்சியதைப் போல 233 நிமிடங்கள் களத்தில் இருந்து அசுரத்தனமாக விளையாடினார். 126 பந்துகளை எதிர்கொண்டவர் 306 ரன்கள் என்ற இமாலய ரன்களை குவித்து எதிரணியை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளார். இந்த போட்டியில் அவர் 55 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடித்து ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டியுள்ளார்.
அவர் அடித்த 306 ரன்களில் 268 ரன்கள் பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் மூலமாக பெறப்பட்டவை. அவரது ஸ்ட்ரைக் ரேட் 242.86 என்ற அளவில் எதிரணிகளை அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. எப்படி பந்து வீசினாலும் அந்தப் பந்துகளை லாவகமாக அதை மைதானத்திற்கு வெளியில் அனுப்பும் தொழில்நுட்பத்தை அவர் அறிந்துள்ளார்.
ஆட்டம் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே 16 பந்துகளில் தனது அரை சதத்தையும் 34 பந்துகளில் சதத்தையும் கடந்து மிரட்டலான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். குறிப்பிடத்தக்க வகையில் நேற்றைய போட்டி முழுவதும் அவர் அவுட் ஆகாமல் இருந்தது மேலும் வியக்க வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரன் குவிப்பதில் தனக்கென்று ஒரு சராசரியை வைத்திருக்கிறார். இது போன்ற ஒரு ஆட்டம், ஒரு நாள் போட்டியை டி20 போட்டிகளை விட சுவாரஸ்யம் மிகுந்ததாகவும், அதிவேகமாக ஆட்டக்கூடிய அவரது திறனும் காண்போர்களை வியக்க வைத்துள்ளது.
அக்சரா குப்தாவின் சாதனையை பாராட்டிய பீகார் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஹர்ஷவர்தன் " பிகார் மாநிலத்தின் பெண் ஆளுமைகள் விளையாட்டு துறையில் சாதித்து பெருமை சேர்த்து வருகின்றனர். தொடக்க ஆட்டத்திலேயே உலகத்தரமிக்க சாதனையை அவர் செய்துள்ளார் என்று பாராட்டியுள்ளார்.
இவரது பிரம்மாண்டமான சாதனையை கண்டு கிரிக்கெட் உலகம் திகைத்து நிற்கிறது. வைபவ் சூர்வன்ஷியை போன்ற அதிரடியான ஒரு இளம் வீராங்கனை மகளிர் கிரிக்கெட் போட்டிகளை சுவாரஸ்யம் மிகுந்ததாக மாற்றுவார். இதற்கு முன் ஐரா குப்தா மாநில அளவிலான போட்டியில், 42 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 346 ரன்கள் குவித்ததே மகளின் உள்ளூர் கிரிக்கெட்டின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் அக்சரா குப்தா இருக்கிறார்.