இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் பாதி போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா என்பது சந்தேகம்தான் என்றச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்த பிசிசிஐ அதிகாரிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்தக் குழப்பங்களுக்கு ஒரே காரணம் நாடாளுமன்ற தேர்தல் தான். இன்று மூன்று மணியளவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. எப்போதும் பல கட்டங்களாகத்தான் இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறும். கடந்த இரண்டு முறை நடந்த தேர்தலும் கூட பல கட்டங்களாகத்தான் நடந்தது.
அதேபோல் இந்தாண்டு தேர்தலும் பல கட்டங்களாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஐபிஎல் தொடர் போட்டி தேதிகளில் தேர்தல் நடந்தால் பெரிய சிக்கல் ஏற்பட்டுவிடும் என்று பிசிசிஐ கணிக்கின்றது.
முதல் இரண்டு வார அட்டவணையை மட்டுமே பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏப்ரல் 7ம் தேதிக்குப் பின்னர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 7ம் தேதிக்குப் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டால் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சிரமமாகிவிடும். அப்போது இந்தியாவில் நடத்த முடியாது. அதேபோல் போட்டிகளைத் தள்ளிப்போட முடியாது. ஆகையால் தான் பிசிசிஐ சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில் தற்போது பிசிசிஐ அதிகாரிகள் அமீரகம் சென்றுள்ளனர். அங்கு சென்று துபாய், ஷார்ஜா ஆகிய பகுதிகளில் தேர்தல் அன்று நடைபெறும் போட்டிகளை நடத்தலாமா என்றும் அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என்றும் ஆராயச் சென்றுள்ளனர். இதனையடுத்து அந்தப் பகுதிகளில் போட்டிகளை நடத்துவது குறித்து அங்குள்ள கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகளுடன் பிசிசிஐ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இதனால் அணி நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். ஐபிஎல் தொடரை வெளிநாடுகளில் நடத்தினால் போக்குவரத்துச் செலவு, ஹோட்டல் செலவு மற்றும் பிற வசதிகள் செலவு என அனைத்துச் செலவுகளும் சேர்ந்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதேபோல் டிக்கெட் வருமானமும் வெளிநாடுகளில் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
கிடைத்தாலும் கூட இந்தியாவில் விற்பனையாகும் அளவிற்கு வருமானம் ஈட்டுமா என்பது மிகவும் சந்தேகம். 2019ம் ஆண்டு தேர்தலுக்கு நடுவே ஐபிஎல் தொடர் எந்த இடையூறும் இல்லாமல் நடந்ததுபோல இந்த ஆண்டும் நடக்க வேண்டுமென்பதே அணி நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது.