

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சபலென்காவை வீழ்த்தி கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்)-முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) மோதினர். 38 வயதான ஜோகோவிச் வெற்றி பெற்றால் உலகின் அதிக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்றவர் (25 முறை) என்ற சாதனையை படைப்பார். 2023-ம் ஆண்டு அமெரிக்க ஓபனுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லாத ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 10 முறையும் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
22 வயதான அல்காரஸ் பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களை தலா 2 முறை சொந்தமாக்கி இருக்கிறார்.
ஆனால் ஆஸ்திரேலிய ஓபன் மட்டுமே அவருக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் அவர் வென்றால் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற வீரர்கள் வரிசையில் இணைவார். இவர்கள் இருவரும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றனர். இதில் ஜோகோவிச் 5 முறையும், அல்காரஸ் 4 முறையும் வென்றுள்ளனர்.
இறுதி போட்டியில் கார்லஸ் அல்காரஸ், நோவக் ஜோகோவிச் ஆட்டத்தில் இருவரும் நீயா, நானா என்ற போட்டியில் அதிரடியாக விளையாடினர்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வெல்லாத ஜோகோவிச், இந்தப் போட்டியில் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் செட்டில் ஜோகோவிச் முன்னிலை பெற்ற நிலையில், 2-வது, 3வது செட்டில் அல்காரஸ் முன்னிலை பெற்ற நிலையில் 4-வது செட்டில் இருவரும் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடினர். இறுதியில் அதிரடியாக விளையாடிய கார்லோஸ் அல்காரஸ் 2-6, 6-2, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் இளம்வயதில் 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற புதிய சாதனையை கார்லோஸ் அல்காரஸ் படைத்துள்ளார். இந்த போட்டியில் வென்ற அவருக்கு பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் ரூ.25.25 கோடி வழங்கப்பட்டது.
25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் தோல்வி அடைந்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தனர்.