இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கு கம்பீரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளனர். கம்பீர் பயிற்சியாளராக வருவதற்கு முன்னரே சில விதிகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் பயிற்சியாளராக விளங்கும் ராகுல் ட்ராவிடின் பதவிக்காலம் இந்த டி20 தொடருடன் முடிவடைகிறது. அதனால், அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீரைத் தேர்ந்தெடுக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதற்கு முன்னரே வெகுக்காலமாக இதுகுறித்து அவரிடம் பேசப்பட்டு வருவதாக சொல்லப்பட்டது. இந்தநிலையில் அவர் பயிற்சியாளர் பதவியில் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுவதற்கு முன்னரே ஐந்து கட்டுப்பாடுகளை கூறியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
அதில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமியை ஒரு நாள் தொடர் அணியில் இருந்தும் நீக்க அவர் திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
பின்னர் ஓராண்டில் அவர்களை டெஸ்ட் தொடர் அணியிலிருந்தும் நீக்க திட்டமிட்டுள்ளாராம். அவர்கள் நால்வரும் 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் டி20 போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கம்பீர் விதித்த ஐந்து கட்டுப்பாடுகள்:
1. வீரர்கள் தேர்வில் பிசிசிஐ தலையிடக்கூடாது. ஒட்டுமொத்த இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் நிர்வாகத்தையும் தன்னிடம் அளித்து விட வேண்டும். இந்திய அணியின் அனைத்து முடிவுகளையும் தான்தான் எடுப்பேன் என்று கூறியுள்ளாராம்.
2. பயிற்சியாளராக அவரைத் தேர்ந்தெடுத்தால், பின்னர் அவர்தான் துணை பயிற்சியாளர், பேட்டிங் பவுலிங் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் அனைவரையும் அவரேதான் தேர்ந்தெடுப்பாராம்.
3. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்று தர வேண்டும். அதை அவர்கள் செய்யாவிட்டால் அவர்கள் நால்வரையும் ஒருநாள் அணியை விட்டு நீக்க வேண்டும். பிசிசிஐ அப்போது தலையிடக்கூடாது எனவும் கவுதம் கம்பீர் கட்டுப்பாடு விதித்து இருக்கிறார்.
4. ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் பங்கேற்கும் வீரர்களுக்கு டெஸ்ட் அணியில் இடம் இல்லை. தனி டெஸ்ட் டீம் உருவாக்கப்பட வேண்டும்.
5. கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக பதவி ஏற்ற நாள் முதல் 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கான பணிகளை துவக்கி விடுவார். அதற்காக மட்டுமே இனி இந்திய அணி தேர்வு செய்யப்படும்.
இந்த ஐந்துக் கட்டுப்பாடுகளால் விராட் கோலி, ரோஹித், ஜடேஜா மற்றும் ஷமி போன்ற வீரர்களின் நிலைமைதான் கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஏனெனில் அவர்கள் டெஸ்ட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டரகள் என்றால், மற்றத் தொடர்களில் விளையாடவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.