

19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு(பிளே-ஆப்) முன்னேறி விட்டன. மீதமுள்ள ஒரு பிளே-ஆப் இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் ஆமதாபாத்தில் இன்று அரங்கேறும் 66-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன.
இந்த சீசனில் இவ்விரு அணிகளுக்கும் இதுவே கடைசி லீக் போட்டியாகும்.
6 வெற்றி, 7 தோல்வி என 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆப் வாய்ப்பில் லேசாக தொங்கி கொண்டிருக்கிறது. சென்னை அணி பிளே-ஆப் சுற்றில் தகுதி பெற வேண்டுமென்றால் இன்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளது குஜராத் அணி. ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட குஜராத் அணிக்கு, புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் முடித்து குவாலிஃபையர் 1 சுற்றிற்குத் தகுதிபெற இந்த ஆட்டத்தின் வெற்றி அதற்கு அவசியமாகிறது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தனர். அதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களை குவித்தது.
மெகா இலக்கான 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய சிஎஸ்கே அணி குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் கனவு தகர்ந்தது.