ஐசிசி உலககோப்பைத் தொடரின் எட்டாவது ஆட்டம் இன்று ஹைத்ராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று மதியம் 2 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே நடக்கவுள்ளது.
இப்போட்டியின் நடுவராக ஆண்ட்ரூ ஜான் பைக்ராஃபட், கிறிஸ் கஃப்பனி மற்றும் அலெக்ஸ் வார்ப் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்போட்டியை ஹைத்ராபாத் சன்ரைஸ் அணி தொகுத்து வழங்கவுள்ளது.
முன்னதாக ஐசிசி உலககோப்பையின் இரண்டாவது போட்டி ஹைத்ராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நெதர்லாந்தை எதிர்த்து 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. அதேபோல் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து ஆடியதில் இலங்கை அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு ஹைத்ராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி கவனம்பெற்றுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஏற்கனவே இந்த மைதானத்தில் விளையாடி வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டமும் அந்த அணிக்கு சாதகமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் உலககோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு ஆடிய இலங்கை அணி தோல்வியை சந்தித்திருந்தாலும், அந்த அணி 326 ரன்கள் எடுத்திருந்தது கவனிக்கத்தக்கது. ஆனால், நெதர்லாந்து அணியிடம் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் மொத்தம் 286 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன்காரணமாக இன்று மதியம் நடைபெறும் போட்டி இரு அணிகளுக்கு சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. முன்னதாக இதுவரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே நடைபெற்ற 156 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் 92 போட்டிகளிலும் இலங்கை 59 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிட்ச் ரிப்போர்ட்:
ராஜீவ் காந்தி மைதானத்தின் இன்றைய பிட்ச் ரிப்போர்ட் படி துடுப்பாட்ட வீரர்களுக்கே சாதகமாக இருக்கும். அந்த மைதானத்தில் நடந்த ,கடந்த ஐந்து போட்டிகளில் ஏறத்தாழ 296 ரன்கள் இலக்காக அமைந்தது. டாஸ் வெல்பவர் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுப்பது வெற்றி விகிதத்தை கூட்டும் என கூறப்படுகிறது.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான 35 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 23 போட்டிகள் வென்று கொடுத்துள்ளார். ஆனால் அக்டோபர் 6 நடந்த போட்டியில் அசாம் 18 பந்துகளில் வெரும் 5 ரன்களே அடித்திருந்தார். இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக பகர் சமான் ஓப்பனராக களமிறங்குவார் என கருதப்படுகிறது. கடந்த போட்டியில் 15 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையிலும் அவரையே ஒப்பனாரக இறக்குவோம் என பாகிஸ்தான் பயிற்சியாளர் ஆர்தர் கூறியுள்ளார்.
மேலும் இரண்டு ஆண்டுகள் முழுவதும் இலங்கை அணியின் பலம் மற்றும் பலவீனம் பார்த்துக்கொண்டு வருகிறோம் ஆகையால் அவர்களை எதிர்க்க தங்களது முழு முயற்சிகளையும் செய்வோம் என பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆர்தர் கூறியுள்ளார்.
அதேபோல் இலங்கை அணியில் மூன்று முதன்மை பந்துவீச்சாளர்கள் காயம் காரணம் இன்று நடைபெறும் போட்டியில் இடம்பெறவில்லை. இது அந்த அணிக்கு பலவீனமாக அமையலாம் என கூறப்படுகிறது. மேலும், துஷ்மந்த் சமீரா மற்றும் வனிந்து ஹசரங்க காயமடைந்தாலும் அணிக்காக விளையாடுகின்றனர் என்று அணி கேப்டன் தசுன் சனகா கூறியுள்ளார்.