இந்திய அணியில் விளையாடாதது குறித்து இஷான் பேசியுள்ளார். தனக்கு அப்போது மனநிலை சரியில்லை என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த இவர், திடீரென்று ஒரு ப்ரேக் எடுத்துக்கொண்டார். இவர் கடைசியாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விளையாடினார். ஆனால் தனிப்பட்ட காரணத்தால் டெஸ்ட் தொடரில் அவரால் விளையாட முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து கவனித்து வந்த பிசிசிஐ, உள்ளூர் போட்டிகளில் விளையாடினால்தான் இந்திய அணியில் தொடர முடியும் மற்றும் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருக்க முடியும் என்றது.
ஆனால், அவர் உள்ளூர் போட்டிகளில் ஆட மறுத்ததால், பிசிசிஐ மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அவர் பெயரை விலக்கியது. இது குறித்து சமீபத்தில் இஷான் கிஷன் அளித்தப் பேட்டியில், "என்னை உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடினால், சர்வதேச போட்டியில் விளையாட முடியும் என கூறினார்கள். ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு சரியான மனநிலையில் நான் இல்லை. தொடர்ந்து நான் இந்திய அணிக்காக விளையாடி இருக்கலாம். இப்போது வருத்தமாகத் தான் உள்ளது.” என்று பேசினார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் மற்றும் ரஞ்சி டிராஃபி போட்டிகளில் விளையாடாத இஷான் கிஷன் இந்தியன் ப்ரீமியர் லீக்கில் இந்தாண்டு தொடக்கத்தில் விளையாடினார். ஆனால் அதில் அவர் நினைத்ததுப் போல் விளையாட முடியவில்லை. இதனால் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.
மேலும் இந்திய அணி படைத்த ஒரு வரலாற்று வெற்றியில் அவர் இடம்பெறவில்லை என்ற வருத்தத்தில் மனம் திறந்திருக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மற்றும் ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர்.