

சீனியர்கள் அனுபவத்தில் எழுச்சி பெற்றது இந்திய அணி . கடந்த சில வாரங்களுக்கும் மேலாக தோல்வியை தவிர எதையும் பார்க்காத இந்திய அணி, தற்போது மீண்டு புத்துணர்ச்சி பெற்றுள்ளது. அத்துடன் கடந்த டி20 தொடரில் சாதித்த இங்கிலாந்து அணியின் வீரர்களை ஓரங்கட்டி ஓரமாக உட்கார வைத்துவிட்டனர். பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது.இந்த போட்டி துவங்கும் முன் போடப்பட்ட டாஸில் வென்ற இங்கி அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இங்கி அணியின் சார்பாக பென் டக்கட்(43) மற்றும் ஜேக்கப் பீத்தல் (14) ஆகியோர் களமிறங்கி 6 ஓவர்கள் வரை நிலைத்து நின்றாடினர். குர்னூர் பிரார் இந்த இரண்டு விக்கட்டுக்களையும் சாய்த்து இந்திய அணிக்கு ஒரு நம்பிக்கையை அளித்தார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 76 ரன்களை குவித்தார்.
அணியின் மற்ற வீரர்கள் எல்லாம் சொற்பரன்களில் அவுட் ஆகி வெளியேற, லியாம் டாவ்சன் மட்டும் 68 ரன்களை குவித்து அணிக்கு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். 47.5 இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி வீழ்த்தி 258 ரன்களுக்குள் முடித்தது. இந்திய அணியின் சார்பாக பந்து வீசிய அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி தனது விரட்டலை துவங்கியது. இந்திய அணியின் அனுபவ ஆட்டக்காரர்கள் ஆன ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 8 ஓவருகளுக்குள் அவுட் ஆகி வெளியேறியது இந்திய ரசிகர்களை மீண்டும் நம்பிக்கை இழக்க செய்தது. ரோஹித் 11 ரன்களும் விராட் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.
அதே நேரம் அணியின் கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அணியினை மீட்டார். ஆயினும் 80 ரன்கள் எடுத்த போது தடைப்பிடிப்பு மற்றும் கெண்டைக்கால் சதைப்பிடிப்பு காரணமாக ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார். இந்திய அணியின் வெற்றி கனவு மீண்டும் பறிபோகிவிடும் என்ற எண்ணம் வந்தபோது , வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இணைந்து அணியினை வெற்றிகரமாக கொண்டு சென்றனர்.
இந்த இருவர் விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணியினால் வீழ்த்த முடியவில்லை. வாஷிங்டன் சுந்தர் 52 ரன்களும் , பட்டேல் 57 ரன்களும் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தனர். டி20 போட்டிகளில் கலக்கி வந்த இங்கி அணியின் ஜோப்ரா ஆர்ச்சரை கில் மற்றும் சுந்தர் ஊறுகாய் போட்டு விட்டனர். 45.2 ஓவர்களில் இந்திய அணி 262 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 57 ரன்களும் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அக்சர் பட்டேல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் தொடரில் 1–0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது. அணியில் இளம் வீரர்கள் இருந்தாலும் அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்கள், ஆட்டத்தின் போக்கினை மாற்றுவார்கள் என்ற பாடத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் புரிந்துக் கொள்ள வேண்டும்.