

ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் 20 ஓவர் போட்டிக்கு உள்ள வரவேற்பு தனி தான். அந்த வகையில் உலகளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் லீக்குகளில் ஒன்றாக ஐபிஎல் மாறியுள்ளது, மில்லியன் கணக்கான மக்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளை ஆவலுடன் பின்தொடர்கின்றனர். 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), உலகின் முதன்மையான டி20 கிரிக்கெட் போட்டியாகும்.
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் களம் இறங்கும்.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.
19வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம், எப்போது நடத்தப்படும்? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் (Mini Auction) குறித்த முக்கியத் தகவல் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. அந்த வகையில் ஐபிஎல் 2026 மினி ஏலம் நடைபெறும் இடம், தேதிகளும் வெளியாகி, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
முதலில் டிசம்பர் 14-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வரும் டிசம்பர் 16-ம் தேதி மினி ஏலம் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இந்த ஏலம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக ஏலத்தை வெளிநாட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ளது. இதற்கு முன்னர் 2023-ம் ஆண்டு துபாயிலும், 2024-ம் ஆண்டு சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலும் ஏலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வீரர்களைத் தக்கவைப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 15-ம்தேதியாகும். இந்த கெடுவுக்கு முன்னதாகவே, பரபரப்பான வர்த்தகம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மினி ஏலம் நடப்பதற்கு முன்பே கடந்த சில நாட்களாக சஞ்சு சாம்சன் - ஜடேஜா அணி மாறுவது குறித்து பரவும் தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.