இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் நேற்று தொடங்கிய இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இதில் ஜெய்ஸ்வால் 57 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த கில் 10 ரன்களுக்கு வெளியேறினார். அரைசதம் கடந்த ரோஹித் சர்மா 80 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய விராட் கோலி தன்னுடைய 500வது சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாடத் தொடங்கினார். இதில் அரைசதம் கடந்து, 500ஆவது சர்வதேச போட்டியில் அரைசதம் அடித்த முதல் சர்வதேச வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் விராட் கோலி. முதல் நாள் முடிவில் 288 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. இதில் விராட் கோலி 86 ரன்கள், ஜடேஜா 36 ரன்கள் எடுத்துக் களத்தில் இருந்ததனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தைத் துவங்கிய விராட் கோலி மற்றும் ஜடேஜா ஜோடி சிறப்பாக விளையாடினர். இதில் விராட் கோலி 76வது சர்வதேச சதத்தையும் 29வது டெஸ்ட் சதத்தையும் பூர்த்தி செய்தார். 11 பவுண்டரிகள் உட்பட 121 ரன்களுக்கு இவர் அவுட் ஆனார். மேலும், 500வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் சர்வதேச வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார். இவருக்கு முன்பு 9 வீரர்கள் 500க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர். இவர்களில் எவரும் தங்களுடைய 500வது போட்டியில் அரைசதம் கூட அடித்ததில்லை. ஆனால், விராட் கோலி சதம் அடித்து அந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்து இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், வெளிநாட்டு மைதானங்களில் தன்னுடைய 28வது சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார் விராட் கோலி. வெளி மைதானங்களில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 29 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது விராட் கோலி அந்த சாதனையை நெருங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.