உலக பாரா தடகளத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த சேலம் 'தங்கமகன்'
மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள் பங்கு பெறும் உலக பாரா தடகளப் போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான 11 வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி தற்போது ஜப்பானின் கோபே நகரில் நடந்து வருகிறது. இதில் 100 நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
இதில் நேற்று (21-5-24) இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களை பெற்று பெருமை பெற்றது. ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டி 63 பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். இது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. தொடர்ந்து அமெரிக்க வீரர்கள் எஸ்டா பிரிட்ஜ் (1.85 மீ) சாம் கிரேவ்( 1.82 மீ) தாண்டி முறையே வெள்ளி வெண்கலம் பெற்றனர்.
சேலத்தைச் சார்ந்த 'தங்க மகன்' மாரியப்பன் 'பெரிய வடகம்பட்டி' எனும் கிராமத்தை சேர்ந்தவர். சிறு வயதில் பள்ளிக்குச் சென்றபோது வலது காலில் பஸ் சக்கரம் ஏறி முட்டிக்கு கீழே பாதிப்பு ஏற்பட்டு மாற்றுத்திறனாளி ஆனவர். இவரது தாயார் சரோஜா காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். மாரியப்பன் சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் விளையாட்டில் கவனம் செலுத்தினார்.
கடும் பயிற்சிகளைத் தொடர்ந்து மாரியப்பன் 2016 ஆம் ஆண்டில் ரியோ பார ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று 'தங்க மகனாக' நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார். அடுத்து 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். தொடர்ந்து தற்போது தங்கம் வென்று அசத்தியிருப்பது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த பதக்கம் இவரது வெற்றி மகுடமாக அமைந்துள்ளது சிறப்பு.
இவரைப் பாராட்டி முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில் "ஜப்பானில் நடந்து வரும் உலக பாரா தடகளப் போட்டியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மாபெரும் சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் மகத்தான பெருமை தேடித் தந்துள்ள அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள். இந்த வெற்றியை ஈட்டுவதற்காக அவர் மேற்கொண்ட கடுமையான பயிற்சிகளை எண்ணி பெருமிதம் அடைகிறேன். இந்த வெற்றிக்கு துணை புரிந்துள்ள இவருடைய குடும்பத்தினர், பயிற்சியாளர் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.